சிறப்பான வீரர்கள்
கடந்த 2020 ஐபிஎல் சீசனில் தனது 5வது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணியில் உலக தரத்திலான ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குவின்டன் டீ காக் உள்ளிட்ட வீரர்கள் மட்டுமின்றி இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற உள்ளூர் வீரர்களும் சிறப்பாக அமைந்துள்ளனர்.
டி20 அணியில் இடம்பிடிப்பு
கடந்த 2020 சீசனில் மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் 14 போட்டிகளில் விளையாடி 516 ரன்களை குவித்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்களை குவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது குறித்து கேள்விகள் எழுந்தன. தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அனுபவத்தை கூற முடியாது
இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து தான் பெற்றதை வார்த்தைகளால் கூற முடியாது என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். அணியின் கோச்கள், கேப்டன், ஷாஹிர் மற்றும் ஆகாஷ் ஆகியோர் தன்மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக்கூடம் போன்றது
இதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பள்ளிக்கூடம் போன்றது என்று சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். அவர்களின் சிறப்பான பார்வையால் தான், தான் சிறப்பான கிரிக்கெட் வீரராக மாற முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பங்கு சிறப்பானது.