சூர்யகுமார் யாதவ்
30 வயதாகும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்தினார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் நல்ல ஃபார்மில் இருந்தார்.
ஒற்றை வரி பதில்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவ்வபோது பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விராட் கோலி, தோனி குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு வரியில் பதிலளித்து அசத்தினார். கோலி ஒரு இன்ஸ்பிரேஷன் எனவும், தோனியை லெஜண்ட் எனவும் கூறியிருந்தார்.
கலாய்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், சஹால் குறித்து கலாய்த்து தள்ளியுள்ளார். அவர், " நீண்ட நாட்களாக சாஹல் எனது பேட்டை தருமாறும், அதை வைத்து களமிறங்கிப்பார்க்கிறேன் எனவும் கேட்டு வருகிறார். அப்போது நான், சாஹல் உங்க உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கு, என்னோட பேட் அதிக எடை இருக்கும். உங்களால எப்படி தூக்க முடியும் எனக்கூறி கொடுக்க மறுத்துவிட்டேன். எனினும் அடுத்த முறை அவரை சந்திக்கும் போது எனது பேட்டை நிச்சயம் தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பெரும் வாய்ப்பு
ஐபிஎல் வீரர்களை கொண்ட இளம் இந்திய அணி வரும் ஜூலையில் இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதற்கான அணியில் சூர்யகுமார் யாதவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கு கண்டிப்பாக வாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.