சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த அணியில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதும் கேப்டன் தோனி எதற்கும் அசரவில்லை. இருக்கிற வீரர்களை வைத்து ஐபிஎல் தொடரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
மூன்று வீரர்கள் நிலை
சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளனர். இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் வரை பங்கேற்க வாய்ப்பே இல்லை.
மாற்று வீரர்கள்
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு உள்ளது. ஆனால், முதல் போட்டி துவங்க உள்ள நிலையில், இதுவரை சிஎஸ்கே அணி யாரையும் மாற்று வீரராக தேர்வு செய்யவில்லை.
இங்கிலாந்து, ஆஸி வீரர்கள்
இதற்கிடையே, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் முடிந்து அந்த அணிகளின் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்துள்ளனர். சிஎஸ்கே அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் பங்கேற்க உள்ளனர்.
36 மணி நேர குவாரன்டைன்
அவர்களுக்கு 36 மணி நேரம் மட்டுமே குவாரன்டைன் என விதியை மாற்றி அமைத்துள்ளது பிசிசிஐ. செப்டம்பர் 17 அன்றே துபாய் வந்து விட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள், செப்டம்பர் 19 அன்றே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
ஆட முடியுமா?
ஆனால், ஒரு தொடரில் இருந்து நேரடியாக துபாய் வந்துள்ள அவர்கள் இருவரும் அதற்குள் போட்டிகளில் பங்கேற்க தயாராக இருப்பார்களா? ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பமான சூழ்நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டு விட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
யாரை தேர்வு செய்வார்?
ஜோஷ் ஹேசல்வுட், சாம் கர்ரன் இருவருமே வேகப் பந்துவீச்சாளர்கள். நல்ல பார்மில் உள்ளனர். கடந்த சில நாட்களாக சர்வதேச போட்டிகளில் ஆடிய பயிற்சி உள்ளது. அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை என்றால் வேகப் பந்துவீச்சில் யாரை தேர்வு செய்வது என்பதில் தோனிக்கு தலைவலி காத்துக் கொண்டுள்ளது.
பந்துவீச்சு
அவர்கள் இருவரைத் தவிர சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், லுங்கி நிகிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஷர்துல் தாக்குர், நிகிடி நல்ல பார்மில் இருக்கிறார்களா? என்பது சந்தேகமே. தீபக் சாஹர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள்
தீபக் சாஹருக்கு போதிய பயிற்சி இல்லாத நிலையிலும், அவரை கேப்டன் தோனி முதல் போட்டியில் ஆட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் சிறப்பான பந்துவீச்சை கொண்டுள்ளார். இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை எனும் நிலையில், லுங்கி நிகிடி அல்லது ஷர்துல் தாக்குரை ஆட வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தோனி.