முதல் போட்டி
டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
பேட்டிங் மோசம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பேட்டிங் வரிசை தான். பலவீனம் என கூற முடியாவிட்டாலும் பலம் குறைந்த விஷயமாகவே சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை காட்சி அளிக்கிறது. மும்பை அணியின் பேட்டிங்குடன் ஒப்பிட்டால் மோசமாகவே உள்ளது.
மும்பை பேட்டிங் வரிசை
முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை பார்ப்போம். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிச்சயம் இடம் பெறப் போகும் பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, க்வின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், கீரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா.
மின்னல் வேக பேட்ஸ்மேன்கள்
இந்த ஆறு பேர் தவிர்த்து கிறிஸ் லின், இஷான் கிஷன், சௌரப் திவாரி, ரூதர்போர்டு ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக களமிறங்க உள்ள ஆறு பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மின்னல் வேகத்தில் ரன் சேர்க்கும் திறன் கொண்டவர்கள்.
திறமையான பேட்ஸ்மேன்கள்
அவர்கள் மூவருமே சிக்ஸர்களை பறக்க விடுவதில் கில்லாடிகள். க்ருனால் பாண்டியாவும் சில நேரங்களில் அதிரடி ஆட்டம் ஆடி கை கொடுப்பார். டி காக் துவக்க வீரராக களமிறங்கி அணியை தனி ஆளாக கரை சேர்க்கும் திறன் கொண்டவர்.
மிரள வைக்கும் பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் வரிசை எந்த அணியையும் மிரள வைப்பதாக உள்ளது. அந்த அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இல்லாததால் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது அந்த அணி. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை எப்படி?
சிஎஸ்கே பேட்டிங் வரிசை
சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில், சிஎஸ்கே அணியில் நிச்சயம் இடம் பெறப் போகும் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் - ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், முரளி விஜய், தோனி, டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆறு வீரர்கள் தான்.
வயதானவர்கள்
இவர்கள் ஆறு பேர் தவிர கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு இருவரில் ஒருவர் அணியில் இடம் பெறக் கூடும். இவர்கள் இருவரும் ஆடினால், முரளி விஜய் வெளியே அமர்வார். இந்த பேட்டிங் வரிசையில் 35 வயதை கடந்தவர்கள் தான் அதிகம்.
அதிரடி பேட்டிங்?
வயதை விட்டு விட்டாலும், அதிரடி பேட்ஸ்மேன்கள் என எடுத்துக் கொண்டால் ஷேன் வாட்சன், தோனியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் எப்போதும் அதிரடியாக ஆடுவார்களா? என்பது சந்தேகமே. சூழ்நிலை சரியாக அமைந்தால் அனைவருமே அதிரடியாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர்கள் தான்.
மந்தம்
ஆனால், கடந்த சீசனில் சென்னையின் மந்தமான ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நிறுத்தி நிதானமாக ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. தோனி மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். மும்பையுடன் ஒப்பிடுகையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலம் குறைந்ததாகவே உள்ளது.