ஐபிஎல் தொடர் மாற்றம்
2020 ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்த மாற்றம் பல்வேறு பிரச்சனைகளையும் உண்டாக்கி உள்ளது.
கட்டுப்பாடுகள்
இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெறுவதால் விமான பயணம், பாதுகாப்பு வளையம், குடும்பத்தினரை சந்திக்க முடியாத சூழல் ஆகியவை உள்ளன.
விலகல்
அதன் காரணமாகவே மூன்று மூத்த வீரர்கள் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளனர். சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மூத்த வீரரும் விலகி உள்ளனர்.
சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரும் குடும்பத்தை விட்டு விலக முடியாத காரணத்தால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். அவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள். அவர்களை சுற்றியே தோனி அணியின் பேட்டிங், பந்துவீச்சை திட்டமிட்டு வந்தார்.
ஹர்பஜன் சிங்கை வைத்து..
சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் இறங்கி அணியை பல போட்டிகளில் காப்பாற்றி உள்ளார். அதே போல, அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கை முக்கிய போட்டிகளில் மட்டும் பயன்படுத்தி எதிரணிகளை துவம்சம் செய்து வந்தார் கேப்டன் தோனி.
சுரேஷ் ரெய்னா ஆடாத போட்டிகள்
அவர்கள் இருவரும் இல்லாமல் முதல் போட்டியில் ஆட உள்ளது சிஎஸ்கே அணி. சுரேஷ் ரெய்னா இதுவரை இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக ஆடவில்லை. ஆனால், தற்போது ஒரு ஐபிஎல் தொடர் முழுவதும், அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.
லசித் மலிங்கா
மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்கா தன் தந்தை உடல்நலக் குறைவுடன் இருப்பதால் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரால் பாதியில் தொடரில் இருந்து விலகி விட்டு, பின் மீண்டும் அணியுடன் சேர குவாரன்டைன் உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்.
முக்கிய பந்துவீச்சாளர்
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் கூட கடைசி ஓவரை சிறப்பாக வீசி 1 ரன்னில் மும்பை அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுதல்
மலிங்கா இல்லாவிட்டாலும் மும்பை அணியில் பல வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவரது அனுபவத்தை ஈடுகட்ட யாராலும் முடியாது என்பதே உண்மை. முதல் போட்டியில் இந்த மூன்று வீரர்களின் இடங்களும் இளம் வீரர்களுக்கு கிடைக்கும் என்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.