டெல்லி கேபிடல்ஸ் மாற்றம்
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-இல் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் வலம் வந்தது டெல்லி அணி. ஆனால், 2019 ஐபிஎல் தொடருக்கு முன் தன் அணியின் பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றி அமைத்தது டெல்லி அணி நிர்வாகம்.
கிண்டல்
பலரும் பெயரை மாற்றிவிட்டால் வெற்றி கிடைத்துவிடுமா என கேலியும், கிண்டலும் செய்து வந்த நிலையில், முதல் போட்டியிலேயே வெற்றியுடன் துவக்கி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.
முக்கிய மாற்றங்கள்
பெயர் மாற்றத்துடன் டெல்லி அணி சில முக்கிய மாற்றங்களை செய்தது. ஷிகர் தவானை தங்கள் அணியில் சேர்த்தது. கங்குலியை ஆலோசகராக நியமித்தது என அந்த முக்கிய மாற்றங்களும் முதல் போட்டி வெற்றியில் பலனளிதுள்ளன. ரிஷப் பண்ட் தன் இயல்பான அதிரடியை காட்டியதும் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
மோசமான சாதனை
டெல்லி அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மூன்று முறை மட்டுமே பிளே-ஆஃப் அல்லது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நான்கு முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்ற மோசமான சாதனையையும் தனதாக்கி வைத்துள்ளது.
இறுதிப் போட்டி செல்லுமா?
பெயர் மாற்றம், கங்குலியின் யோசனைகள், ரிஷப் பண்ட் அதிரடி ஆகியவை டெல்லி கேபிடல்ஸ் அணியை பிளே-ஆஃப் இறுதிப் போட்டி ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.