புதிய அத்தியாயம்
2019 ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் புதிய அத்தியாயத்தை தொடங்க முடிவு செய்து தயாராகி உள்ளன. அதிலும் டெல்லி அணி தனது பழைய பெயரான டெல்லி டேர்டெவில்ஸ் என்பதை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டதில் இருந்து தனது புதிய பாதையை துவக்கி உள்ளது.
வித்தியாசமான கூட்டணி
பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை தொடர வைத்து, அவருக்கு உறுதுணையாக கங்குலியை ஆலோசகராக நியமித்து வித்தியாசமான ஒரு கூட்டணியை வழிகாட்ட அழைத்து வந்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம். இது பலன் அளிக்குமா? என்பதை முதல் சில போட்டிகளில் நாம் கண்கூடாக பார்க்கலாம்.
கட்டமைப்பு
மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி மிக ஸ்திரமான கட்டமைப்புகளை ஏற்கனவே கொண்டுள்ளது. சச்சினின் ஆலோசனைகள், நீண்ட கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஜெயவர்தனேவின் பயிற்சி, ரோஹித் சர்மாவின் திறமையான கேப்டன்சி என அந்த அணி கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த சீசனில் மும்பை
ஆனால், அணித் தேர்வில் இருந்த சில குழப்பங்கள், எதிர்பாராத நேரத்தில் வீரர்களின் காயங்களாலும் கடந்த ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்தது. அப்போது ரோஹித் சர்மா பார்ம் இன்றி தவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் எப்படி?
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் தலைமையில் டி20க்கு என்றே தயார் செய்யப்பட்ட வீரர்கள் - கீரான் பொல்லார்டு, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா உள்ளிட்டோர் ஆடவுள்ளனர்.
டெல்லி அணி எப்படி?
டெல்லி அணியில் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அனுபவ தவான், இளம் புயல்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், எக்ஸ்பிரஸ் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் என கலவையான அணி களம் இறங்க உள்ளது.
இவரா? அவரா?
இரண்டு அணிகளும் சந்திக்க உள்ள இந்த போட்டியில் சுவாரஸ்யமான விஷயம் இது தான். சச்சின் ஆலோசனையில் இயங்கும் மும்பை வெல்லுமா? அல்லது கங்குலி ஆலோசனையில் இயங்கும் டெல்லி வெல்லுமா?