மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை, தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறவே இல்லை. ஆனால் இதுவே இவர்களுக்கு நம்பிக்கை தரும் விஷயமாக அமைந்துவிடுகிறது. ஏனென்றால் அதன்பிறகு அந்த அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகள் தொடர் வெற்றியை பெற்றுள்ளதால் இந்த முறை ஹாட்ரிக் அடிப்பதற்காக காத்துள்ளது.
பலமான அணி
இதற்காக இந்தாண்டு அணிக்கு ஜிம்மி நீஷம், ஆடம் மைல்ன், பியூஸ் சாவ்லா ஆகியோரை பந்துவீச்சை பலப்படுத்த கொண்டு வந்துள்ளது. அதே போல அணியில் இங்கிலாந்து தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருணால் பாண்டியா , ஆல்ரவுண்டர்களுக்கு பாண்டியா - பொல்லார்ட் காம்போ என அசுர பலத்தில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா - ட்ரெண்ட் போல்ட் பெரும் சக்தியாக விளங்குகின்றனர்.
ஹாட்ரிக் வெற்றி?
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, புது சீசனை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளோம். அணிக்கு புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சிறப்பான தருணமாக இருக்கும். எனவே இந்த வருடமும் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். துபாயில் கடந்த வருடம் விட்ட அதிரடியை சென்னையில் இன்று முதல் மீண்டும் தொடர்வோம் என தெரிவித்தார்.
நியூசிலாந்து காம்போ
எங்கள் அணியில் போல்ட், ஜிம்மி நீஷம், ஆடம் மைன் என 3 நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர். ஆடம் மைல்ன் மும்பை அணிக்காக ஏற்கனவே விளையாடியுள்ளார். அவர் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. அதே போல ஜிம்மி நீஷம் முதல் முறையாக அணிக்கு வந்துள்ளார். அடுத்தபடியாக ட்ரெண்ட் போல்ட், அணிக்கு என்ன தேவையோ அதை நன்கு தெரிந்தவர். எனவே கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அவரின் சிறப்பான பங்களிப்பை தருவார் என நம்புகிறேன்.
பியூஸ் சாவ்லா
அணியில் பியூஸ் சாவ்லா இணைந்திருப்பது குறித்து பேசிய ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் மிக அனுபவம் பெற்றவர் சாவ்லா. அவருடன் நான் 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் இருந்து ஒன்றாக ஆடியுள்ளேன். சிறந்த அனுபவம் உள்ளதால் அணிக்கு தேவையானத சிறப்பாக செய்துகொடுப்பார். அவருடன் களத்தில் பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.