மும்பையிடம் தோற்ற ராஜஸ்தான்
ஐபிஎல் 2020 போட்டிகள் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி 20 போட்டிகளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 194 ரன்களை குவித்த நிலையில், அதை சேஸ் பண்ண முடியாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு அபராதம்
இதையடுத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித்திற்கு நெருக்கடி
மும்பை இந்தியன்ஸ் உடனான நேற்றைய போட்டியின் தோல்வியை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அபராதம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கூடுதல் நெருக்கடியை தந்துள்ளது. ஏற்கனவே இதேபோன்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடுமையான போட்டி
இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்தில் உள்ள நிலையில், அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நாளை மறுதினம் மோதவுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்து முதல் 3 இடங்களில் உள்ள நிலையில், அந்த போட்டியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடினமானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.