பெங்களூர்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் பெங்களூர் சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் துவங்க உள்ளது.
இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டித் தொடரில் கமெண்டரி செய்து வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இதற்காக பெங்களூர் வந்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரை சுற்றிப் பார்த்த மைக்கேல் கிளார்க்கிற்கு, ஆட்டோ ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. எனவே அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்திய மைக்கேல் கிளார்க், ஓட்டுநரிடம் ஆட்டோ ஓட்டுவது குறித்து சில நிமிடங்கள் கற்றுக் கொண்டார்.
பின்னர் சிறிது தூரத்திற்கு ஆட்டோவும் ஓட்டிப் பார்த்தார். தான் ஆட்டோ ஓட்டுவது போன்ற வீடியோவை மைக்கேல் கிளார்க் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.