ஐபிஎல் தொடரால் மாறுதல்
ஐபிஎல் தொடர் 2008இல் துவங்கப்பட்டது. அப்போது முதல் இந்திய அணி பெரிய மாறுதலை சந்தித்தது. கிரிக்கெட் உலகில் அதன் பின் முன்னணி அணியாக மாறியதோடு, டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே முதல் மூன்று அணிகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின் எழுச்சி
ஆஸ்திரேலிய அணி 90களின் இறுதியில் துவங்கி சுமார் 10 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது. அந்த அணியின் வெற்றிப் பயணத்தை 2011 உலகக்கோப்பை தொடரில் முடித்து வைத்தது இந்திய அணி. இந்திய அணியின் எழுச்சிக்கு ஐபிஎல் தான் காரணம் என கூறப்படுவதுண்டு.
சரமாரி புகார்
அதே போல, ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் ஐபிஎல் தான் காரணம் என சரமாரி புகார் கூறி உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்.
ஆஸி அணியின் சீண்டல்
ஆஸ்திரேலிய அணியினர் இயல்பாகவே ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். எதிரணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால், அவர்களை சீண்டி கோபமடைய செய்வார்கள். அதன் மூலம், அவர் அமைதி இழந்து தன் விக்கெட்டை பறிகொடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
காரணம் என்ன?
இந்த யுக்தியை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி காண்பிக்கவில்லை. குறிப்பாக விராட் கோலியை சீண்டினால் அவர் சிறப்பாக ரன் குவிப்பார் என்ற ஒரு காரணத்தை முன் வைத்து ஆஸ்திரேலியா அவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்பட்டாலும், மைக்கேல் கிளார்க் வேறு ஒரு முக்கிய காரணத்தை கூறி அதிர வைத்துள்ளார்.
அஞ்சுகிறார்கள்
இந்திய கிரிக்கெட்டின் பண பலம் காரணாமாக, ஆஸ்திரேலிய அணி மட்டுமின்றி அனைத்து அணிகளும் இந்திய அணியிடம் மண்டியிட்டு அமைதியாக நடந்து கொள்வதாகவும், ஐபிஎல்-இல் ஆட வேண்டும் என்பதால் விராட் கோலி மற்றும் பிற வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டவே அஞ்சுகிறார்கள் எனவும் கூறி உள்ளார். இந்த புகாரை ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறார் கிளார்க்.
பண பலம்
"எல்லோருக்கும் இந்தியா எத்தனை சக்தி வாய்ந்தது என தெரியும். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளுரில் ஐபிஎல் போன்றவற்றில் இந்த விளையாட்டில் பண பலம் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம்." என பிசிசிஐயின் பண பலத்தை குறிப்பிட்டு பேசினார் கிளார்க்.
கோலியை சீண்ட அச்சம்
"ஆஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், சில காலமாக இந்திய அணியிடம் மண்டியிட்டு உள்ளன. அவர்கள் விராட் கோலி மற்றும் பிற இந்திய வீரர்களை சீண்ட அஞ்சுகிறார்கள். காரணம், ஏப்ரல் மாதத்தில் அவர்களுடன் ஆட வேண்டும் என்பது தான்" என்றார் கிளார்க்.
பணம் சம்பாதிக்க இப்படி செய்கிறார்கள்
"நான் கோலியை சீண்ட மாட்டேன். அவர் என்னை பெங்களூர் அணிக்கு என்னை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் ஆறு வாரத்தில் தான் ஒரு மில்லியன் டாலர் சம்பாதிப்பேன். என வீரர்கள் நினைக்கின்றனர்" என பகிரங்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள் மீது புகார் கூறினார் கிளார்க்.
மாறி விட்டார்கள்
மேலும், "ஆஸ்திரேலிய அணி தாங்கள் எப்படி கடுமையாக இருக்க வேண்டுமோ, அதில் இருந்து மாறி, சில காலமாக அமைதியாக மாறி விட்டார்கள்" என கூறினார் மைக்கேல் கிளார்க். இவரது சரமாரி குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.