இழுபறி
டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறைந்தபாடு இல்லை. உலகக்கோப்பை நடைபெறவிருக்கும் அக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸின் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.
SGM கூட்டம்
இதனை தீர்மானிக்க வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டுகிறது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. எனினும் இந்தியாவில் நடத்துவதே இன்னமும் முதல் தேர்வாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிகவும் கடினம்
இந்நிலையில் அது மிகவும் கடினம் என மைக் ஹசி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. எனினும் கொரோனா தாக்கியது. டி20 உலகக்கோப்பையில் அதற்கும் அதிகப்படியான அணிகள் பங்கு பெறலாம். இதற்காக பல நகரங்களின் மைதானங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். வீரர்களை பல இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். அதில் தான் மிகப்பெரும் ஆபத்தே உள்ளது.
வேறு நாடு வேண்டும்
என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வேறு ஏதேனும் ஒரு நாட்டை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனென்றால் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அவ்வளவு அதிகமாக உள்ளது. உலகின் பல நாடுகளும் இந்தியாவுக்கு சென்று விளையாட தயக்கம் காட்டுகின்றன எனத்தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அனுபவம்
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான மைக் ஹசி சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் கொரோன பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் தற்போது நாடு திரும்பிவிட்டார்.