தல தோனி
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. 15 பேரைக் கொண்ட இந்த அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூத்த வீரர் அஷ்வின் இடம் பிடித்துள்ளார். அதேபோல மற்றொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் விராட் கோலி அறிவித்துள்ளார். மேலும், டி20 உலக கோப்பைக்காக அணியின் மென்டாராக (ஆலோசகர்) தல தோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணியின் ஆலோசகர்
இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐசிசி உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியாகும். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இப்போது ஐக்கிய அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக உள்ள தோனியின் அனுபவம் டி20 உலக கோப்பையில் கோலியின் படைக்குப் பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
மைக்கேல் வோகன் பாராட்டு
டி20 உலக கோப்பைக்கான அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு எந்தளவுக்கு உதவும் என்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் ஜம்பவான் மைக்கேல் வோகன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வோகன், டி 20 உலகக் கோப்பை சமயத்தில் தோனி அங்கு இருப்பதால் இந்திய வீரர்களுக்குப் பெரியளவில் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் நிலைமைக்கு ஏற்றபடி மாற்றப்பட்ட வியூகங்களுக்காகவும் தல தோனியை அவர் பாராட்டினார்.
ஸ்மார்ட் கிரிக்கெட்
சிஎஸ்கே அணியின் அற்புதமான வியூகங்கள் குறித்துப் பேசிய மைக்கேல் வோகன், "சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் வரிசையில் பல்வேறு காம்பினேஷன்களை நம்மால் பெற முடியும். மைதானத்தின் ஆடுகளத்தைப் பொறுத்தும், எதிரணியின் வியூகத்தைப் பொறுத்தும் சென்னை அணி தங்கள் பேட்டிங் வரிசையைத் தொடர்ந்து மாற்றி வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் க்ளென் மெக்ஸ்வெல் மீண்டும் பந்து வீசுவார் என்பது தோனிக்கு தெரியும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வரை மெக்ஸ்வேல் வீசுவார் என்பதை தோனி உணர்ந்திருந்தார். இதன் காரணமாகவே வலது கை பேஸ்ட்மேனை அடுத்தாக அவர்கள் அனுப்பியுள்ளனர். இது தான் ஸ்மார்ட் ஆன கிரிக்கெட் மூவ். அது உங்கள் பேட்டிங் வரிசை மாற்றக்கூடிய வகையில் இருந்தால் இப்படி பல்வேறு பலன்கள் நமக்குக் கிடைக்கும்" என்று சிஎஸ்கே வியூகத்தைப் பாராட்டிப் பேசினார்.
மிகச் சிறந்த முடிவு
மேலும், டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமித்துள்ளது மிகச் சிறந்து முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.இது குறித்துப் பேசி அவர், "டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே நீங்கள் மிகச் சிறந்த ஒரு கேப்டனை (தோனி) பெற்று உள்ளீர்கள். அவர் டி 20 உலகக் கோப்பைக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்ட போது சிறிது சலசலப்பு ஏற்பட்டது எனக்குத் தெரியும். டி20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டான இருந்த தோனி ஏன் இந்திய அணியின் ஆலோசகராக இருக்கக் கூடாது? என்னைக் கேட்டால் இது மிகச் சிறந்தவொரு முடிவு என்பேன்.
அவர் ஒரு மாஸ்டர்
போட்டி நடைபெறும்போது உங்களுக்கு ஒரு விதமான மனநிலை தேவை. டக்அவுட்-இல் இருக்கும் போது சரி, பயிற்சியின் சமயத்திலும் சரி உங்களுக்கு அந்த மனநிலை தேவைப்படும். அது இயல்பாகவே தோனியிடம் இருக்கிறது. செய்யும் செயலை மிகச் சிறப்பாகச் செய்பவர் அவர். தோனி எடுக்கும் முடிவுகள் 90 முதல் 95% வரை சரியாகவே அமைகிறது. அவர் ஒரு மாஸ்டர். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்று வரிசையாகப் பாராட்டித் தள்ளிவிட்டார்.
சென்னை vs பெங்களூரு
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடந்த செப். 24ஆம் தேதி ஷார்ஜியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தேவதத் படிக்கல் 70 ரன்களையும் கோலி 53 ரன்களையும் எடுத்தனர். இருப்பினும், அதன் பிறகு வந்தவர்கள் பெரிதாக ரன் எடுக்கவில்லை. மேலும் அந்த போட்டியில் பெங்களூரு அணியின் பவுலிங் சிறப்பாக அமையவில்லை. இதனால், 18 ஓவர்களிலேயே சென்னை அணி 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.