என்ன நடந்தது?
ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இடையே அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவர் வலியில் துடித்ததாக கூறப்பட்டது. அவர் அதன் பின் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
காயம் பெரிது?
அவருக்கு காயம் பெரிதாக இருப்பதாக கூறப்பட்டது. அவர் காயம் பெரிதாக இருப்பதால் தான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோகுறித்து விளக்கம் அளிக்கையில், அவரால் பேட்டிங் செய்ய முடியும், ஆனால் ஓட முடியாது என தெரிவித்தனர் பிசிசிஐ அதிகாரிகள்.
போட்டியில் பங்கேற்பு
இந்த நிலையில், ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரிலேயே கடைசி லீக் போட்டியில் பங்கேற்று பிசிசிஐக்கு அதிர்ச்சி அளித்தார். பிசிசிஐ கூறி வந்த அத்தனை விஷயங்களையும் பொய் என சொல்லாமல் சொல்லி அதிர வைத்தார் ரோஹித் சர்மா. சிலர் அவருக்கு காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா?
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யை விளாசி இருக்கிறார்.
மைக்கேல் வாஹன் அதிரடி
"ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என்றால் அது என்ன காயம் என்பதை முதலில் கூறுங்கள். அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஓகே. அதனால் தான் அவர் போட்டிகளில் ஆடவில்லை. அது பிரச்சனையே இல்லை"
கேள்விப்பட்டதே இல்லை
"ஆனால், அவர் ஆடினால் அவருக்கு காயம் ஏற்பட்டு விடும் என்பதால் அவரை நாங்கள் அணியில் ஆட வைக்கவில்லை என (பிசிசிஐ) கூறுவதை என் வாழ்வில் இதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை." என பிசிசிஐ-யை கடுமையாக விமர்சனம் செய்தார் மைக்கேல் வாஹன்.
ஏன் ஆஸ்திரேலியா செல்லக் கூடாது?
மேலும், அடுத்த வாரத்தில் என்ன நடக்கும் என ஆவலாக உள்ளது. ரோஹித் அடுத்த வாரத்தில் சிறப்பாக ஆடினால், அவர் நிச்சயம் ஆஸ்திரேலியா சென்றே ஆக வேண்டும். அவர் ஐபிஎல்-இல் ஆடிவிட்டு ஆஸ்திரேலியா மட்டும் செல்ல முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் வாஹன்.
வெளிப்படையாக இல்லை
இந்த விவகாரம் கையாளப்பட்ட விதமும் விசித்திரமாக உள்ளது. இது உண்மையில் வெளிப்படையாக நடக்கவில்லை. இது இப்படி நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என பிசிசிஐ இந்த விஷயத்தில் மூடி மறைத்து பேசி வருவதை சாடினார்
சகஜம் தான்
ரோஹித் சர்மாவுக்கு காயம் என்றால், அவருக்கு காயம் என்று சொல்லுங்கள். அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான் என்றார் மைக்கேல் வாஹன். ரோஹித் சர்மா விஷயத்தில் பிசிசிஐ வேறு எதையோ மறைத்து வருவதாகவே சந்தேகம் எழுகிறது. அதைத் தான் மைக்கேல் வாஹனும் குறிப்பிட்டு இருக்கிறார்.