துபாய்: அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில், SRH வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து மைக்கேல் வாகன் பதிவிட்ட ட்வீட் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில், இன்று (செப்.22) இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் விளையாடி வருகின்றன.
இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
பிசிசிஐ-ன் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் அந்தவகையில் இன்று ஹைதராபாத் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நடராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பிறகு, இவர்கள் 6 பேருக்கும் இன்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் 'நெகட்டிவ்' என்று இன்று பிற்பகல் ரிசல்ட் வெளியானது. இதனால், திட்டமிட்டப்படி இன்றைய போட்டி நடைபெற்று வருகிறது.
விஜய் சங்கர் உட்பட ஆறு பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், கொரோனா வைரஸை பொருத்தவரை, அது மூன்று நாட்களுக்கு உடலில் எந்தவித சிக்னலும் கொடுக்காமல் அமைதியாக இருந்து, அதன் பிறகே வேலையைக் காட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருப்பினும், போட்டி ரத்து செய்யப்படாமல், திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு அன்று காலை, இந்தியாவின் பிஸியோ தெரபிஸ்ட்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்திய வீரர்கள் பலர் அவரிடம் நெருக்கமாக இருந்ததால், போட்டியில் களமிறங்கி விளையாட அச்சம் தெரிவித்து பின்வாங்கியது இந்திய அணி. அதற்கு இந்திய அணி தரப்பில், "பிஸியோவுடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடினால், மற்ற வீரர்களும் அதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று காரணம் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அப்படியிருந்தும், இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
இப்போது, அதே காட்சி, அப்படியே ஐபிஎல் தொடரில் பிரதிபலித்துள்ளது. நடராஜனுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாக, மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. ஆனால், இப்போது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட முடிவு போல், போட்டி நிறுத்தப்படவில்லை. இன்று திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன், "இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது போல், ஐபிஎல் ரத்து செய்யப்படுகிறதா என்று பார்ப்போம்!. ஆனால், நான் உறுதியாக கூறுவேன், 'ஐபிஎல் ரத்து செய்யப்படாது என்று'! ட்வீட் செய்துள்ளார்.