லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதையும், ஐபிஎல் அணிகள் இந்திய வீரர்களை அடுத்தடுத்து தனி விமானங்களில் துபாய்க்கு அழைத்துச் செல்வதையும் குறிப்பிட்டு மைக்கேல் வாகன் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.
இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.
மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் 2021: சிஎஸ்கே, பஞ்சாப் வீரர்கள் அதிர்ச்சி.. அணி நிர்வாகங்கள் வைத்த குறை - முழு விவரம்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கரண் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே துபாய்க்கு சென்று, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று (செப்.11) இரவு ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாகூர் ஆகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 2 முறை கோவிட் பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனையில் நெகட்டிவ் வரும் பட்சத்தில் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்பட்டு, போட்டியில் பங்கேற்பார்கள். தற்போது இந்திய அணி நிர்வாகிகள் மத்தியில் கொரோனா தொற்று பரவியதால், மான்செஸ்டரில் நடக்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி மறுத்துவிட்டது. எனவே, டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டதால், இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்ததும், 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுடன் இணைய வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும்படி அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது. மான்செஸ்டரில் இருந்து தங்கள் வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம், தனது வீரர்களான விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை துபாய்க்கு அழைத்து வருவதற்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் இருவரும் நாளை அதிகாலை துபாய் சென்றடைவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து தான், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி உட்பட பலர் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்தியா ஐபிஎல்-லுக்காக பின்வாங்கவில்லை என்று கூறினார்கள். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை அழைக்க விமானங்களை அனுப்பி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். தொடர் ஆரம்பிக்க இன்னும் 7 நாட்களே உள்ளன. ஐபிஎல் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்று சற்று காட்டமாக ட்வீட் செய்துள்ளார். அதாவது, ஐபிஎல் தொடருக்காக ஒரு டெஸ்ட் போட்டியையே ரத்து செய்துவிட்டது இந்திய அணி என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.