ஐபிஎல் செயல்பாடு
ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வந்துள்ளது. இரண்டு முறை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தத்தில் நான்கு முறை பிளே-ஆஃப் சென்றதை தாண்டி அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பை வெல்ல முடியவில்லை.
கடந்த ஐபிஎல் சொதப்பல்
கடந்த 2019 ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தை பிடித்து அவமானப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பிளே - ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை.
கம்பீர் விமர்சனம்
கடந்த ஆண்டு ஐபிஎல் துவங்கும் முன்பே முன்னாள் வீரர் கம்பீர், ஐபிஎல் வென்று கொடுக்காத விராட் கோலியை எப்படி தான் ஏழாவது ஆண்டாக கேப்டனாக வைத்துள்ளார்கள்? என கேள்வி கேட்டு விமர்சித்தார்.
ரசிகர்கள் மனமாற்றம்
தொடரின் முடிவில் பெங்களூர் அணி மண்ணைக் கவ்வியதை அடுத்து பல ஆண்டுகளாக நம் அணி கோப்பை வெல்லும் காத்திருந்த பெங்களூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விமர்சகர்கள் பலரும் கேப்டனை மாற்றினால் என்ன? எனக் சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர்.
நிர்வாக மாற்றம்
இந்த நிலையில், எப்போதும் போல, அணியின் பயிற்சியாளர் குழுவை முற்றிலுமாக நீக்கி விட்டு, புதிய குழுவை நியமித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ஆஸ்திரேலிய முன்னாள் வெறியவீரர் சைமன் காட்டிச் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இயக்குனர் பதவி ஏன்?
மேலும், மைக் ஹெஸ்ஸனை இயக்குனராக நியமித்து புதிய திட்டம் வகுத்தது அந்த அணி. கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்கவே சக்தி வாய்ந்த இயக்குனர் பதவி என்ற ஒன்றை புதிதாக உருவாக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு எழுந்தது.
கோலி ஆதிக்கம்
கேப்டன் கோலி அணி விஷயங்களில் பயிற்சியாளர்களை தாண்டி ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றும் சிலர் கருதினர். அதனால், அவரை கட்டுப்படுத்த அல்லது நீக்கவே இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது.
கேப்டன் மாற்றம்?
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியின் போது கேப்டன் பதவியில் இருக்கும் கோலி அணியை கட்டுப்படுத்துகிறாரா? கேப்டன் பதவியில் மாற்றம் இருக்குமா? என புதிய இயக்குனர் மைக் ஹெஸ்ஸனிடம் கேட்கப்பட்டது.
மைக் ஹெஸ்ஸன் பதில்
அதற்கு நாங்கள் அப்படி நினைக்கவில்லை. கேப்டன் பதவியில் இருந்து கடந்த இரு வாரங்களில் அவரை நீக்குவதை பற்றி நாங்கள் பேசவே இல்லை என்றும் கூறினார். எனவே, கோலி தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் என தெரிகிறது.
சிலருக்கு ஏமாற்றம்
பெங்களூர் அணி வெற்றி பெற கேப்டன் பதவியில் மாற்றம் வேண்டும் என கேட்ட சிலருக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. விராட் கோலி ஒரு முறை ஐபிஎல் கோப்பை வென்றால் அனைத்து விமர்சனங்களும் அடங்கி விடும். எனினும், அது நடக்குமா? என்பது தான் தெரியவில்லை.