சன்ரைசர்ஸ் ஐதராபாத் தோல்வி
ஐபிஎல்லின் 3வது போட்டியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 163 ரன்களை இலக்காக கொடுத்திருந்தது. ஆயினும் இந்த ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 10 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்ஆர்எச் தோல்வியுற்றது.
கணுக்காலில் காயம்
இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தன்னுடைய 5வது ஓவரை போட்டபோது, கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவர் தன்னுடைய ஓவரை போட முற்பட்டார். ஆயினும் வலி தாங்க முடியாமல் அவர் ஆட்டத்திலிருந்து இடையிலேயே வெளியேறினார்.
தொடரிலிருந்து விலகல்
அவருக்கு கணுக்காலில் மிகவும் தீவிரமாக காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவிலேயே காயத்தில் இருந்து மீண்டுவர எஸ்ஆர்எச் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் இணைந்துள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வெற்றி பெற தீவிரம்
தனது முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியுற்ற நிலையில், அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் வரும் சனிக்கிழமை அபுதாபியில் மோதவுள்ளது. அந்தப் போட்டியில் விளையாடி வெற்றிபெற அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.