மிட்செல் ஸ்வெப்சனுக்கு வாய்ப்பு
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பங்கேற்று விளையாடுவதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள மிட்செல் ஸ்வெப்சன்னுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.
சுய பரிசோதனைக்கு உதவும்
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான உலக தரத்திலான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவதன்மூலம் தன்னுடைய திறமைகளை தான் சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்று ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் தெரிவித்துள்ளார்.
உற்சாகத்திற்கு காரணம்
கிரிக்கெட் டாட் காம் இணையதளத்திற்காக பேசிய ஸ்வெப்சன், இந்திய வீரர்களுக்கு பந்து வீசுவது தனக்கு மற்றொரு சவால் மற்றும் உற்சாகத்திற்கான மற்றொரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் உலக தரத்திலானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த வாய்ப்பிற்காக தன்னால் காத்திருக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
3 போட்டிகள்... 23 விக்கெட்டுகள்
மார்ஷ் ஷெப்பீல்ட் ஷீல்ட்டின் 3 போட்டிகளில் பந்துவீசிய அவர், 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகுந்த கவனத்தை பெற்றுள்ள நிலையில், தான் வீழ்த்தும் விக்கெட்டுகளை தான் கணக்கிடுவதில்லை என்றும் நாதன் லியோனின் சாதனைகளை முறியடிப்பதே தன்னுடைய இலக்கு என்றும் ஸ்வெப்சன் கூறியுள்ளார்.
இரு கைகளால் ஏந்துவேன்
இந்திய டெஸ்ட் தொடருக்காக தான் முழு அளவில் தயாராகியுள்ளதாகவும், அந்த வாய்ப்பு கிடைத்தால் இரு கைகளால் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.