இந்தியாவில் கொரோனா
இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொரோனா பாதித்த மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பது மிகப்பெரும் போராட்டமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள லாக்டவுனால் பொதுமக்கள் பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் மித்தாலி ராஜும் கொரோனா உதவியில் குதித்துள்ளார்.
மித்தாலி ராஜுன் உதவி
இந்திய மகளிர் அணி கேப்டனான மித்தாலி ராஜ், சமீபத்தில் லாக்டவுனால் வேலையின்றி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி இருந்தார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த முன்னெடுப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
மகளின் கடமை
ஆனால் மித்தாலி ராஜ் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருவதால் அவரால் அந்த உதவியை செய்ய முடியவில்லை. இந்நிலையில் மித்தாலி ராஜுன் தந்தை அந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளார். அவர் நிதிச்சுமையில் இருக்கும் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார். ஆனால் அவர் அதில் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டி மித்தாலி ராஜ் கிண்டலடித்துள்ளார்.
பிரச்னை
மித்தாலி ராஜுன் தந்தை உதவிப்பொருட்களை வழங்கும் நேரத்தில் மாஸ்க்கை சரியாக போடவில்லை. அவர் புகைப்படத்திற்காக மாஸ்க்கை முகத்திற்கு கீழ் இறக்கி போட்டிருந்தார். இதனை கவனித்துள்ள மித்தாலி ராஜ், கொரோனா சமயத்தில் நான் செய்து வந்த உதவிகளை தற்போது நான் வீட்டில் இல்லாத இந்த நேரத்தில் என் தந்தை செய்து வருகிறார். ஆனால் அதில் இருக்கும் ஒரே பிரச்னை அவர் மாஸ்க் போட்டிருக்கும் முறைதான் என தலையில் அடித்துக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக மும்பையில் பிசிசிஐ ஏற்படுத்தியுள்ள 8 நாட்கள் பபுளில் வீராங்கனைகள் அனைவரும் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும், இந்திய ஆடவர் அணியுடன் வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.