மும்பை : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நன்கொடை அளிக்க பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இந்தியாவிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரவலாக நன்கொடை அளித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள், சச்சின், கங்குலி, ரெய்னா, கோலி உள்ளிட்டவர்கள் தங்களது நிதியை பிரதமர் கேர் நிதிக்கு அளித்துள்ள நிலையில், தற்போது கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், பூனம் யாதவ் மற்றும் தீப்தி ஷர்மா உள்ளிட்டவர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஏறக்குறைய ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நன்கொடைகளை வழங்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் தாராளமாக தங்களது நன்கொடையை அளித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயும் 51 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இதேபோல சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவையும் நன்கொடை அளித்துள்ளன.
இந்நிலையில் வீராங்கனைகளும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என தற்போது நிரூபித்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் மிதாலி ராஜ், 5 லட்சம் நிதியுதவியை பிரதமர் கேர் நிவாரண நிதி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனித்தனியாக அளித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் கவனத்தை பெற்ற லெக் ஸ்பின்னர் பூனம் யாதவும் 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்த உதவியை மட்டுமே தங்களால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள மிதாலி ராஜ், கூடிய விரைவில் இந்த இக்கட்டிலிருந்து வெளிவருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவும் 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளார்.