10 அணிகள் பங்கேற்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலககோப்பை 2020 தொடர் நாளை துவங்கி வரும் மார்ச் 8, மகளிர் தினத்தில் நிறைவடையவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி நாளை சிட்னியின் ஷோகிரவுண்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரமாண்ட துவக்க விழா
அடுத்த மாதம் 8ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் துவக்கவிழா சிட்னி ஓபரா ஹவுசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய, இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
மிதாலி ராஜ் கருத்து
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி பங்கேற்கும் இந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்பட்டாலும், இந்திய வீராங்கனைகள் நெருக்கடி இன்றி விளையாடுவார்கள் என்று முன்னாள் இந்திய டி20 கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். வலிமையான அணிகள் மற்றும் சாதாரண அணிகளுக்கிடையிலான இடைவெளி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிதாலி ராஜ் உறுதி
கடந்த காலங்களில் இருந்ததுபோன்று தற்போது கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொள்ள வெறும் பயிற்சிகள் மட்டும் போதாது என்றும் மிதாலி ராஜ் குறிப்பிட்டார். அதையும் மீறி ஒவ்வொரு போட்டியிலும் தனிப்பட்ட கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம் என்றும் பயிற்சிகள் அந்த போட்டி குறித்த ஒரு வரைபடத்தை மட்டுமே நமக்குள் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
போட்டி பலமாக இருக்கும்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த தொடரின் முதல் போட்டியில் நாளை மோதவுள்ளன. இரு அணிகளிலும் மிகச்சிறந்த திறமையான வீராங்கனைகள் உள்ளதால், போட்டி பலமாக இருக்கும் என்றும் இரு அணிகளும் அதிக ரன்களை குவிப்பார்கள் என்றும் மிதாலி ராஜ் கூறினார். மேலும் டி20 போட்டிகளில் வெற்றியை கணிப்பது கடினம் என்றும் அந்த குறிப்பிட்ட போட்டியில் வீராங்கனைகளின் ரன் குவிப்பே போட்டியை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நிலை மாறியுள்ளது
தான் விளையாட ஆரம்பித்த காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டிகளில் பார்த்து ரசித்த கிரிக்கெட் வீரர்களையே தாங்கள் உத்வேகமாக கொண்டு ஆடியதாகவும், ஆனால் தற்போது காலம் மாறியுள்ளதாகவும், தற்போது இளம் வீராங்கனைகள், தங்களது ரோல்மாடலாக கிரிக்கெட் வீராங்கனைகளை கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
ரசிகர்களின் மனநிலை மாறியுள்ளது
தான் ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று ஆடியபொழுது இருந்த நிலை தற்போது மாறியுள்ளதாகவும், மக்கள் தங்களது தேசிய அணியின் நிலை குறித்து நன்றாக அறிந்துள்ளதாகவும் மிதாலி ராஜ் மேலும் கூறினார். கடந்த 2002ல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து தான் சாதனை புரிந்தபோது, மக்கள் அதை செய்தித்தாள்களை பார்த்தே தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.