தென்னாப்பிரிக்க மகளிர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டியில் சிறப்பாக செயலாற்றி வெற்றியை பெற்ற நிலையில் கடந்த போட்டியில் மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியை தழுவினர்.
3வது போட்டி துவக்கம்
இதையடுத்து இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தன. இந்நிலையில் லக்னோவின் ஏகானா மைதானத்தில் இன்றைய தினம் 3வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங்கை துவக்கி விளையாடி வருகிறது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவுட்
முதல் ஓவரிலேயே ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக்-அவுட் ஆன நிலையில் தொடர்ந்து மந்தனா சிறப்பாக விளையாடினார். ஆயினும் 25 ரன்களை மட்டுமே எடுத்து அவரும் அவுட்டானார். இதையடுத்து மிதாலி ராஜ் மற்றும் பூனம் ராவத் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்தியாவின் ஸ்கோரை 100க்கு மேல் உயர்த்தினர்.
10,000 ரன்களை கடந்த மிதாலி
தற்போது 28 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் பூனம் ராவத் தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். மிதாலி ராஜ் 36 ரன்களை எடுத்துள்ளார். இந்த போட்டியின்மூலம் மிதாலி ராஜ் தனது 10,000 ரன்களை கடந்து சர்வதேச அளவில் இரண்டாவது வீராங்கனையாக சாதனை புரிந்துள்ளார்.