மித்தாலி படை
2005 உலகக் கோப்பைப் போட்டித் தொடரையும் மித்தாலி தலைமையில்தான் இந்திய அணி சந்தித்தது. அப்போது இந்திய அணி பெரிய அளவில் ஆடவில்லை. ஆனால் இந்த முறை முதல் போட்டியிலிருந்து கடைசிப் போட்டி வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் பட்டாசாக பொறிந்தனர் இந்திய வீராங்கனைகள்.
அதிர்ஷ்டம் இல்லை
இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிலை கடைசி வரை நன்றாகத்தான் இருந்தது. கடைசி 2 ஓவர்களில்தான் தலையெழுத்து மாறிப் போனது. பதட்டத்தில் செய்த தவறுகள் அவர்களுக்கு பாதகமாகி விட்டது. இப்போது நடந்ததைப் பேசிக் கொண்டிருக்கும் நேரமில்லை. அடுத்த கட்டத்துக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் நுழைய வேண்டிய தருணம் வந்து விட்டது.
மகளிர் ஐபிஎல் தேவை
மகளிர் ஐபிஎல் உடனடியாக தேவை என்ற குரல் கிளம்பத் தொடங்கி விட்டது. மிதாலி ராஜும் இதையே வலியுறுத்தியுள்ளார். இந்திய வீராங்கனைகளுக்கு அது மிகுந்த உற்சாகத்தையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும் என்பது மிதாலியின் கருத்தாகும்.
பதட்டம்
இதுகுறித்து இறுதிப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மிதாலி பேசுகையில் இளம் வீராங்கனைகள் பசட்டமாக இருந்தனர். இதுதான் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. இப்போது நாம் ஐபிஎல் போட்டி குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும். இதுதான் மகளிருக்கான ஐபிஎல் தொடங்க சரியான நேரம்.
ஆஸ்திரேலியா போல
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கென்று பிக் பாஷ் லீக் தொடர் இருப்பது போல பெண்களுக்கும் பிக் பாஷ் உள்ளது. எனவே இங்கும் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை தொடங்கலாம். அது பல இளம் வீராங்கனைகளை கண்டறிய நமக்கு வாய்ப்பாக அமையும்.
இரு இந்திய வீராங்கனைகள்
பிக் பாஷ் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஹர்மநன்ப்ரீத் கெளர் ஆகியோர் விளையாடியுள்ளனர். மேலும் பல வீராங்கனைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நமக்கு அனுபவம் கூடும். நமது திறமையையும் அதிகரிக்க முடியும் என்றார் மிதாலி.