டெல்லி: பிரதமர் மோடியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரையும் நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை கிரிகெட் வீரர் இஷாந்த் சர்மா கொடுத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவிற்கும், வாரணாசியைச் சேர்ந்த பிரதிமா சிங் என்ற கூடைப்பந்து வீராங்கனைக்கும் வரும் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தன்னுடைய திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு கொடுக்க இஷாந்த் சர்மா பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்தார். பின்னர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து அவரிடமும் அழைப்பிதழை இஷாந்த் சர்மா கொடுத்தார்.
திருமணத்திற்கு வர வேண்டும் என்று நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளேன் என்றும் அவர் திருமணத்திற்கு வர முயற்சி செய்வதாக சொல்லி இருக்கிறார் என்றும் இஷாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் மோடியும், அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவார்கள் என்று நம்புவதாகவும் இஷாந்த் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு திருமணத்திற்கான அழைப்பிதழ் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இஷாந்த் சர்மாவின் தந்தை விஜய் குமார் சர்மாவும் பிரமரை சந்தித்து திருமணத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
கிரிகெட் வீரர்களான தோனி, சுரேஷ் ரய்னா ஆகியோர் இஷாந்த்தின் திருமணத்திற்கு வருவதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளனர். முன்னாள் கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது வருகையை விரையில் உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.
இஷாந்த் சர்மாவிற்கும் பிரதிமா சிங்கிற்கும் கடந்த ஜூன் 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.