முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற உள்ளது. அதைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.
கொரோனா பரவும் முறை
முதற்கட்டமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவியது. அவர்களிடம் இருந்து அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இது இரண்டாம் கட்டம்.
மூன்றாம் கட்டம்
இதையும் தாண்டி, ஏற்கனவே கொரோனா உள்ளவர்களிடம் இருந்து சமூகத்தில் உள்ள பலருக்கு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பரவினால் அது மூன்றாம் கட்டம் ஆகும். அந்த நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது.
அந்த அறிவிப்பு வரும்
அதை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும், அப்போது தான் மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும். அதற்கான அறிவிப்பு வெளியாகும் என முன்பே மக்கள் உஷாராக இருந்தார்கள்.
மார்ச் 24 அறிவிப்பு
மார்ச் 19 அன்று, ஒருநாள் அடையாள மக்கள் ஊரடங்கு அறிவிப்பை மோடி வெளியிட்ட போதே, விரைவில் நீண்ட நாள் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் மார்ச் 24 அன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
21 நாட்களுக்கு ஊரடங்கு
அதில் மக்கள் எதிர்பார்த்த ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி. 21 நாட்களுக்கு, ஏப்ரல் 15 வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அவர் அறிவித்தார். அந்த 30 நிமிட அறிவிப்பு தான் இந்தியாவின் தலைஎழுத்தை தீர்மானிக்கப் போகிறது.
தலைஎழுத்து
ஒன்று இந்தியா அந்த 21 நாட்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கும். அல்லது கொரோனா நம்மை வீழ்த்தி முன்னேறினால், இந்தியா இன்னும் பல நாட்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்படும். அது கடும் பொருளாதார குழப்ப நிலையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
19.7 கோடி மக்கள்
மோடியின் அந்த 30 நிமிட அறிவிப்பை சுமார் 19.7 கோடி மக்கள் சுமார் 201 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பார்த்துள்ளனர். இது இந்தியாவில் மிகப் பெரிய தொலைக்காட்சி சாதனை ஆகும். இதற்கு முன்னதாக 2019 ஐபிஎல் இறுதிப் போட்டி செய்த சாதனையை இந்த பேச்சு வீழ்த்தி உள்ளது.
ஐபிஎல்-ஐ விட அதிகம்
மூன்றரை மணி நேரம் நடைபெற்ற 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியை 13.3 கோடி பார்வையாளர்கள் பார்த்து இருந்தனர். அதை மோடியின் 30 நிமிட பேச்சு முறியடித்துள்ளது. மோடியின் பேச்சை சுமார் 389.1 கோடி நிமிடங்கள் மக்கள் பார்த்துள்ளனர். அதிக பார்வையாளர்கள் மோடி அறிவிப்பை காண முக்கிய காரணம் கொரோனா வைரஸால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தது தான் என கூறப்படுகிறது.
மற்ற அறிவிப்பு பார்வையாளர்கள்
மார்ச் 19 மக்கள் ஊரடங்கு அறிவிப்பை 8.3 கோடி பார்வையாளர்களும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆர்டிக்கிள் 370 அறிவிப்பை 6.5 கோடி பார்வையாளர்களும், 2016இல் பணமதிப்பு இழப்பு அறிவிப்பை 5.7 கோடி பார்வையாளர்களும் கண்டுள்ளனர்.