பரபரப்பு
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தமே நான் ஓய்வு பெற காரணம் என பரபரப்பை கிளப்பினார். மேலும் அணி நிர்வாகம் மாறிய பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவேன் எனத்தெரிவித்திருந்தார்.
குடியுரிமை
முகமது அமீர் தற்போது குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ளார். அவரது மனைவி இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால் முகமது அமீர், தானும், தனது குடும்பத்தினரும் இங்கிலாந்து குடியுரிமை பெறவுள்ளோம். அடுத்த 7 ஆண்டுகள் வரை அங்குள்ள உள்நாட்டு அணியில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
ஐபிஎல்-ல் பாக். வீரர்கள்
இதனால் அவர் இங்கிலாந்து குடியுரிமையுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். அவர் அப்போதும் கூட இங்கிலாந்து குடியுரிமையுடன் தான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரின் விளக்கம்
இந்நிலையில் தனது நிலைபாடு குறித்து பேசியுள்ள அமீர், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற பின் என்ன செய்யலாம், எந்தெந்த போட்டிகளில் பங்கேற்கலாம் என்பது குறித்து தற்போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. குடியுரிமை பெற்ற பின் அதற்கேற்றார் போல் செயல்படுவேன் என்பது போல கூறியுள்ளார்.