சூதாட்டப் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. 2010இல் சூதாட்டப் புகாரில் சிக்கி தடை பெற்றவர் தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர். திறமையான வேகப் பந்துவீச்சாளராக கருதப்படும் அவர் தடைக்கு பின் பாகிஸ்தான் அணியில் இணைந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
டெஸ்ட் ஓய்வு
இரு ஆண்டுகளுக்கு முன் திடீரென இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அப்போது முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் முன்னாள் வீரர்கள் அவர் குறித்து ஏதேனும் கருத்து கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
அணியில் இல்லை
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஆமிர் தேர்வு செய்யப்படவில்லை. அதைத் தொடர்ந்து அவர் ஏமாற்றத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் அவருக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக அவர் கருதினார்.
கருத்து மோதல்
வக்கார் யூனிஸ் - முகமது ஆமிர் இடையே அவரது டெஸ்ட் ஓய்வு குறித்து கருத்து மோதல் நடந்து வந்தது. ஆமிர் தான் டி20 தொடர்களில் பங்கேற்கவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறி வருகிறார். ஆனால், அவரை டி20 தொடர்களில் புறக்கணித்து வருகிறது பாகிஸ்தான் அணி.
துன்புறுத்தல்கள்
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார் ஆமிர். இது பற்றி அவர் கூறுகையில், தான் மனதளவில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் இனியும் இது போன்ற துன்புறுத்தல்களை அனுபவிக்க முடியாது என்றும் கூறி உள்ளார்.
ஓய்வு
மேலும், 2010 முதல் 2015 வரை தான் இதை அனுபவித்ததாகவும்,அப்போது தடையை அனுபவித்து எல்லாவற்றையும் செய்ததாகவும் கூறி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தன்னைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருவதாகவும் எனவே தான் ஓய்வு பெற உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.