முகமது ஆஸிப்
முகமது ஆஸிப் 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டெஸ்ட் போட்டிகளில் உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் முத்திரை பதித்தார். ஒருநாள் போட்டிகளில் ஓரளவு சிறப்பாகவே பந்து வீசி வந்தார்.
2010 ஸ்பாட் பிக்ஸிங்
இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது ஆஸிப், முகமது ஆமிர் மற்றும் சல்மான் பட் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் கிளம்பியது. அது பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலுக்கியது. ஆஸிப் வேண்டும் என்றே நோ-பால் வீசி இருந்தார்.
7 ஆண்டுகள் தடை
அதற்காக, அவர் இங்கிலாந்தில் சிறை தண்டனையை அனுபவித்தார். மேலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அவரது தடை முடிந்த பின்னரும் அவருக்கு பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆமிர் வாய்ப்பு
அதே சமயம், அவருடன் சேர்ந்து தடை விதிக்கப்பட்ட முகமது ஆமிருக்கு மீண்டும் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாகிஸ்தான் அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனக்கு வாய்ப்பு அளித்த அணியை கூட மறந்துவிட்டு கடந்த ஆண்டு தன் 27 வயதில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று அதிர்ச்சி அளித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் - மேட்ச் பிக்ஸிங்
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது மட்டுமே பெரிய மேட்ச் பிக்ஸிங் புகார் இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமீபத்தில் கூட உமர் அக்மல் மேட்ச் பிக்ஸிங் நபர்கள் தன்னை அணுகியதை கூறாததால் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.
ஆஸிப் அதிரடி புகார்
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பலரும் மேட்ச் பிக்ஸிங் செய்த பின்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்றும், தொடர்ந்து வாய்ப்பு பெற்று கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்றும், தனக்கு மட்டும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் பகிரங்கமாக புகார் கூறி உள்ளார் முகமது ஆஸிப்.
தவறு செய்கிறார்கள்
"எல்லோருமே தவறு செய்கிறார்கள். நானும் செய்தேன். எனக்கு முன்னும் வீரர்கள் பிக்ஸிங் செய்தார்கள். எனக்கு பின்னும் பிக்ஸிங் செய்தார்கள். எனக்கு முன் செய்தவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் இருக்கிறார்கள். எனக்கு பின் செய்த சிலர் அணியில் ஆடுகிறார்கள்" என அதிரடியாக கூறினார் ஆஸிப்.
இரண்டாம் வாய்ப்பு
"எல்லோருக்கும் இரண்டாம் வாய்ப்பு கிடைத்தது. சில வீரர்கள் என்னைப் போல நடத்தப்படவில்லை. நான் உலகில் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்பட்ட போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு என்னைக் காப்பாற்ற நினைக்கவில்லை." எனவும் கூறினார்.
என்னை பற்றி பேசுகிறார்கள்
தன் பந்துவீச்சைப் பற்றி கெவின் பீட்டர்சன், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஹஷிம் ஆம்லா உயர்வாகப் பேசுவதைக் குறிப்பிட்டு அது தான் தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது எனவும், தான் உலகில் ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிட்டு பேசினார் ஆஸிப்.
ஆமிர் பற்றி என்ன சொன்னார்?
ஆமிருக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை சாடிய ஆமிர், தனக்கு வாய்ப்பு அளித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆட தயாராக இருப்பதாக கூறி உள்ளார். எத்தனையோ பிக்ஸிங் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்த பாகிஸ்தான், ஆஸிப்புக்கும் வாய்ப்பு அளிக்குமா?