மீண்டும் இணைந்த மூத்த வீரர்கள்
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பைக்கு பிறகு மூத்த வீரர்கள் ஹபீஸ் மற்றும் மாலிக் இருவருக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் மிஸ்பா உல் ஹக், இவர்கள் இருவருக்கும் டி20 பார்மேட்டில் விளையாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.
டி20 உலக கோப்பை
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் மோதவுள்ள பாகிஸ்தான் அணியில் ஹபீஸ் மற்றும் மாலிக் இருவரும் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இளைய வீரர்கள் இருக்க மூத்த வீரர்களுக்கு அணியில் இடமளித்துள்ளது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ரமீஸ் ராஜா வலியுறுத்தல்
இந்நிலையில், இளைய வீரர்களுக்கு வழிவிட்டு, முகமது ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார். தான் வீரர்கள் குறித்த சொந்த கருத்துக்களை கூறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ரமீஸ் ராஜா, அவர்கள் இருவரும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை என்றும் கூறியுள்ளார்.
விளையாட ஆர்வம்
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாட 39 வயதான ஹபீஸ் மற்றும் 38 வயதான மாலிக் இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதன்பின்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக ஹபீஸ் கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவித்துள்ள மாலிக் டி20 குறித்து மௌனமாக உள்ளார்.