உலகக்கோப்பை
2023ம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் உலகக்கோப்பை தொடரானது நடைபெறும் என தெரிகிறது. அதற்கு இந்திய அணி தயாராவதற்கு இன்னும் 25 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் நியூசிலாந்துடன் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துவிட்டன. இடையில் ஐபிஎல் தொடர் 2 மாதங்களுக்கு நடைபெறும் என்பதால் தற்போது இருந்தே உலகக்கோப்பைக்கான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கைஃப் எச்சரிக்கை
இந்நிலையில் அதில் பிசிசிஐ தவறு செய்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்களின் சராசரி வயது 31 ஆகும். அவர்கள் அனுபவ வீரர்களுடன் தான் களமிறங்க வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டுவிட்டனர். அப்படி பார்த்தால் இந்திய அணிக்கு மிக குறைந்த போட்டிகளே இருப்பதால் தற்போது இருந்தே திட்டங்களை வகுக்க வேண்டும்.
பிரச்சினை என்ன
இந்தியாவுக்கு தற்போதைய பிரச்சினையே பவுலிங் தான். புதிய வீரர்களை கண்டுபிடிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு நல்ல வீரர்களை கைவிடுகிறோம் என நினைக்கிறேன். நியூசிலாந்துடனான 2வது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாக்கூர் ஆடவில்லை. முகமது சிராஜ் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஷர்துல் தொடர்ந்து ஆடியிருக்க வேண்டும். புவனேஷ்வர் குமார் அணியில் ஏன் இல்லை என்றே புரியவில்லை.
சரியாக செய்ய வேண்டும்
அணியில் சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் என்றால், தயவு செய்து அதனை சரியாக செய்யுங்கள். புதிதாக முயற்சி செய்து பார்க்கிறேன் என்று நினைத்தால், உலகக்கோப்பையின் போது சிக்கல் உண்டாகும். எனவே தற்போதே வீரர்களை தேர்வு செய்யுங்கள், அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து தயார் செய்யுங்கள்.
யாரெல்லாம் தேவை
பவுலிங் யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் பும்ராவை தவிர மற்ற 3 பவுலர்களும் மணிக்கு 145 கிமீ வேகத்தில் தான் வீசுகின்றனர். எனவே உம்ரான் மாலிக் போன்ற வீரரையும் தற்போது இருந்தே வாய்ப்பு கொடுத்து தயார் செய்ய வேண்டும் என கைஃப் கூறியிருக்கிறார்.