சொதப்பிய ரிஷப்
இந்திய அணியில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டி வரை கருதப்பட்டார். அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், அந்த நிலை தற்போது கே.எல். ராகுலுக்கு சென்றுள்ளது.
இந்திய அணியில் சொதப்பல்
ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின்கீழ் விளையாடிவரும் ரிஷப் பந்த், அங்கு சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இந்திய அணியில் விளையாடும்போது சொதப்பலான ஆட்டத்தையே அவரால் வழங்க முடிகிறது. இதற்கு காரணம் இந்திய அணியில் அவரது நிலை இன்னும் சரியாக தீர்மானிக்கப்படாததுதான் என்று முன்னாள் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பான வீரர் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி கேபிடல்சில் சிறப்பு
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி நிகழ்ச்சியில் பேசிய கையிப், டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவரை மூன்றாவது அல்லது 4வது நிலையில் இறக்குவது குறித்து தானும், கங்குலியும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டு அவரை களத்தில் இறக்குவதாகவும், தங்களது நம்பிக்கையை பொய்க்காமல் ரிஷப் பந்த்தும் சிறப்பாக விளையாடுவதாகவும் கையிப் கூறினார். பந்த் விளையாடுவதற்கு போட்டியின் கடைசி 10 ஓவர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.
இந்திய அணியில் ஆலோசனை இல்லை
ஆனால் இந்திய அணியில் இத்தகைய ஆலோசனைகள் எதுவும் அவருக்காக செய்யப்படுவதில்லை. 4வது இடத்தில் விளையாடிய பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் வருகைக்கு பிறகு அடுத்த ஆர்டர்களில் விளையாட வைக்கப்படுவதாகவும், அவர் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டுமா அல்லது இறுதியில் களமிறக்கப்படுவதா என்பதில் இந்திய அணியில் தடுமாற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.