பெங்களூர்: 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஐபிஎல் ஏலத்தில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 5 வீரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
அதில் அஸ்கர் ஸ்டானிக்சாய் முதலாவதாக ஏலத்திற்கு வந்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. அதே நேரம், அந்த அணியின் முன்னணி வீரர் முகமது நபியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் ஆப்கன் வீரர் என்ற பெருமையை முகமது நபி பெறுகிறார். மேலும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ரூ.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை யாருமே வாங்க முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.