உலகக்கோப்பை சர்ச்சை
2019 உலகக்கோப்பை தொடரின் போது முகமது ஷாசாத் சர்ச்சையில் சிக்கினார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. அதனால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது ஷாசாத் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
புகார் சொன்ன ஷாசாத்
தனக்கு லேசான காயம் தான் மருத்துவர் இன்னும் இரண்டு - மூன்று நாட்களில் விளையாடலாம் எனக் கூறினார். ஆனால், திடீரென என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என புகார் கூறினார். தான் கிரிக்கெட்டை விட்டே விலகி விடப் போவதாகவும் கூறி இருந்தார்.
வெளிநாடு பயணம்
இந்த நிலையில், அவர் மீது வேறு சில புகார்களும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி வெளிநாடு செல்லும் வீரர்கள் அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும். ஆனால், ஷாசாத் இரு முறை அனுமதி இன்றி வெளிநாடு சென்றுள்ளார். அதில் ஒரு முறை பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார்.
ஒழுங்கு கமிட்டி விசாரணை
இந்த நிலையில் உலகக்கோப்பையின் போது நடந்த சர்ச்சை மற்றும் அவர் வெளிநாடு சென்ற விவகாரம் குறித்து விசாரிக்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அவரை அழைத்து இருந்தது. ஆனால், ஷாசாத் குறிப்பிட்ட நாட்களில் விசாரணைக்கு வரவில்லை.
காலவரையற்ற தடை
இதை அடுத்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படும் என தெரிகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமில்லாமல், மற்ற டி20 தொடர்களிலும் ஷாசாத்தால் விளையாட முடியாது.
பதில் இல்லை
முகமது ஷாசாத் இந்த தடை குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் ஏற்கனவே கிரிக்கெட்டை விட்டு விலக உள்ளதாக கூறியது உண்மைதானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டு வருகிறது. தற்போது தங்கள் அணியின் முன்னணி வீரரை தடை செய்து மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது எங்கே போய் முடியுமோ?