பீல்டிங் சிக்கல்
இந்திய அணிக்கு பீல்டிங் எப்போதுமே சிக்கலாகவே இருந்துள்ளது. விரல் விட்டு எண்ணும் அளவிலேயே நல்ல பீல்டர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். 2000க்கு பின் சௌரவ் கங்குலி கேப்டன்சியில் இந்திய அணியின் பீல்டிங் தரம் ஓரளவு முன்னேறியது.
அந்த இருவர்
யுவராஜ் சிங், முகமது கைஃப் ஆகிய இருவரும் இந்திய அணியில் ஆடிய போது பீல்டிங் அபாரமாக இருந்தது. இருவரும் பீல்டிங்கிற்காகவே பெயர் பெற்றனர். அதன் பின் ஓரிருவர் மட்டுமே அணியில் சிறப்பாக பீல்டிங் செய்தனர்.
சுரேஷ் ரெய்னா, ஜடேஜா
அவர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா, மற்றொருவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால், தற்போது இந்திய அணியில் தங்களைப் போன்ற முழுமையான பீல்டர் இல்லை எனக் கூறி உள்ளார் முகமது கைஃப். இப்போதுள்ள பீல்டர்களிடம் என்ன குறைகள் எனவும் கூறி உள்ளார்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரு முழுமையான பீல்டர் என்றால் நீங்கள் நன்றாக கேட்ச் பிடிக்க வேண்டும், அடிக்கடி ஸ்டம்ப்பை தகர்க்க வேண்டும், வேகமாக ஓட வேண்டும், ஓடும் பந்தை சரியான டெக்னிக் கொண்டு பிடிக்க வேண்டும் என கூறினார் முகமது கைஃப்.
நாங்கள் பெயர் எடுத்தோம்
"நாங்கள் ஆடும் போது யுவராஜ் சிங்கும், நானும் நல்ல பீல்டர்கள் என பெயர் எடுத்தோம். இன்று, இந்திய அணியில் நிறைய நல்ல பீல்டர்கள் இருக்கிறார்கள், ஆனால் யாரும் ஒரு முழுமையான பீல்டராக இல்லை." என தன் விமர்சனத்தை முன் வைத்தார் கைஃப்.
அந்த முழுமை இல்லை
"ஒரு வீரர் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க வேண்டும், ஷார்ட் லெக்கில் கேட்ச் பிடிக்க வேண்டும், லாங் ஆனில் பவுண்டரியில் வேகமாக ஓட வேண்டும். அந்த முழுமை இப்போது இல்லை" என இப்போதுள்ள வீரர்களிடம் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டினார் கைஃப்.
ஜடேஜா எப்படி?
தற்போதுள்ள வீரர்களில் உலகிலேயே சிறந்த பீல்டர்களில் ஒருவராக அறியப்படும் ரவீந்திர ஜடேஜா பற்றியும் பேசினார் முகமது கைஃப். "ஜடேஜா நல்ல பீல்டர். வருடம் ஆக ஆக அவர் முன்னேறி வருகிறார். ஆனால், இந்திய அணியின் ஸ்லிப் பீல்டிங் அந்த அளவுக்கு இல்லை" என்றார்.
பீல்டிங் சறுக்கல்கள்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இருப்பினும் சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில், முகமது கைஃப் பீல்டிங் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.