லண்டன்: புவனேஸ்வர் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் ஷமி தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பாதியிலேயே விலகினார். 3வது ஓவரை வீசிய போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் போட்டி முழுவதும் பந்துவீசாமல் மைதானத்தின் வெளியே ஓய்வு எடுத்தார்.
இது குறித்து கோலி கூறியதாவது: தசைப்பிடிப்பு காரணமாக அடுத்து சில போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடமாட்டார். காயம் பெரிய அளவில் இல்லை. அவர் விரைவில் முழு உடல் தகுதி பெறுவார் என்று நம்புகிறேன் என்றார்.
ஷிகார் தவானைத் தொடர்ந்து புவனேஸ்வர் குமாரும் தற்போது காயம் காரணமாக விலகுவார் என்று தெரிய வருகிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும் எதிரணியை திணற வைத்தனர். புவனேஸ்வர் குமார் விலகி உள்ளதால் மாற்று வீரராக முகமது ஷமி அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்று தெரிகிறது.
முகமது ஷமியும் வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக பவுலிங் செய்ய கூடியவர். இந்திய அணி அடுத்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வரும் 22ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் மேலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முன்னதாக காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.