மொத்தம் 8 அணிகள்
உலகக் கோப்பை டி20 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
தோனி என்ட்ரி
கடந்த செப்.8ம் தேதி வெளியிடப்பட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்தனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
பயோ-பபுள்
தற்போது இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அக்டோபர் 15ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், வெறும் ஒரேயொரு நாள் இடைவெளியில்.. அதாவது அக்டோபர் 17ம் தேதியே டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. சமீபத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதலில் அங்கு நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி, பிறகு அங்கேயே ஒன்றரை மாதம் தங்கியிருந்து அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், கடைசி டெஸ்ட் போட்டி, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டாலும், நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் அங்கிருந்து நேராக ஐபிஎல் தொடரில் பங்கேற்று தற்போது விளையாடி வருகின்றனர்.
எரிச்சலா இருக்கு
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பயோ-பபுள் குறித்து ஷமி மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இந்த காலங்களில் வெளியே செல்வதே மிகப்பெரிய சவால். அப்படியிருக்கையில், பயோ-பபுளில் இருந்தபடியே நீங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம்மேற்கொள்ள வேண்டும். அந்த சுற்றுப்பயணம் ஒரு நீண்ட பயணமாக இருந்தால், அந்தக் காலத்திற்கு நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். இதனால், வீரர்கள் மனநிலை பாதிக்கப்படலாம். மேலும் இது சில சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில், நீங்கள் உங்கள் அறையிலேயே இருக்க வேண்டும். அந்த மனநிலையில் நீங்கள் உங்கள் நாட்டிற்காகவும், உங்கள் ஐபிஎல் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும். இதைச் செய்ய நீங்கள் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். நாம் மட்டுமே நம் உடலை கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கேள்விக்குறி
அவர் உள்நோக்கத்துடன் பிசிசிஐ மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை என்றாலும், வீரர்கள் மீது திணிக்கப்படும் அளவுக்கதிகமான ஒர்க் லோடு குறித்து மனம் வெதும்பி பேசியிருப்பது இந்திய அணி நிர்வாகத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள இந்த சூழலில், ஷமி மன அழுத்தம் குறித்து பேசியிருப்பதன் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் அவரது செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.