அசத்தல் பந்துவீச்சாளர் ஷமி
கடந்த ஓராண்டாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவர் விக்கெட் வேட்டை ஆடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன் 2015 முதல் 2018 வரை பல கடினமான நிகழ்வுகளை சந்தித்தார் ஷமி.
2015 உலகக்கோப்பைக்குப் பின்
2015 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற முகமது ஷமி அதன் பின் காயம் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். சுமார் 18 மாதங்கள் சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்ட பின்னரே இந்திய அணிக்கு திரும்பினார் ஷமி.
2018இல் சர்ச்சை
அதன் பின் 2018இல் ஷமியின் மனைவி ஹாசின் ஜகான், அவர் மீது வன்முறை புகாரை கிளப்பினார். மேலும், பல பெண்களுடன் ஷமி சாட்டிங் செய்ததாகவும் புகார் கூறினார். அது குறித்த விசாரணை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளால் துவண்டு போயிருந்தார் ஷமி.
ஐபிஎல்-லுக்கு முன் விபத்து
இதன் இடையே அந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் கார் விபத்தில் சிக்கினார். அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர் சர்ச்சை மற்றும் காயங்களால் அப்போது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மன உளைச்சல்
அதனால், அப்போது கடும் மன உளைச்சலில் சிக்கித் தவித்தார் ஷமி. ஒரே நேரத்தில் குடும்ப வாழ்விலும், கிரிக்கெட் கேரியரிலும் ஏற்பட்ட நிலைகுலைவால் தவித்துள்ளார். அப்போது தான் அந்த மோசமான எண்ணம் அவருக்கு வந்துள்ளது.
அதிர்ச்சி அளித்த ஷமி
மூன்று முறை தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக இப்போது சமூக வலைதளத்தில் சக வீரர் ரோஹித் சர்மாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தன் குடும்பத்தினர் பயத்துடன் தன்னுடனே அமர்ந்து இருந்ததாகவும் கூறி உள்ளார்.
கடினமான காலம்
இது பற்றி ஷமி கூறுகையில், "2015 உலகக்கோப்பையில் காயம் அடைந்தேன். அதன் பின் அணிக்கு திரும்ப 18 மாதங்கள் ஆனது. அது தான் என் கிரிக்கெட் வாழ்வின் மோசமான காலம். அதன் பின் குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பித்தன. அதன் இடையே ஐபிஎல்-க்கு 10 - 12 நாட்கள் இருந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கினேன். அதே சமயம், என் தனிப்பட்ட விவகாரம் பற்றி ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வந்தது" என்றார்.
அருகிலேயே இருப்பார்கள்
"என் குடும்பத்தின் ஆதரவு மட்டும் இல்லை என்றால், கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்கு மூன்று முறை தற்கொலை எண்ணம் வந்தது. என் வீட்டில் யாராவது ஒருவர் எப்போதும் என்னுடன் அமர்ந்து என்னை கண்காணித்து வந்தனர். என் வீடு 24வது மாடியில் இருந்தது. நான் அங்கே இருந்து கீழே குதித்து விடுவேனோ என பயந்தார்கள்" எனக் கூறி அதிர வைத்தார் ஷமி.
உதவிய குடும்பம்
அந்த சமயத்தில் தன் குடும்பத்தினர் தன்னை கிரிக்கெட் மீது கவனம் செலுத்துமாறு கூறியதாகவும், தான் சோர்ந்து போன போதெல்லாம் தன் சகோதரர் மற்றும் நண்பர்கள் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர்கள் மட்டும் இல்லையென்றால் தான் மோசமாக ஏதாவது செய்து இருப்பேன் எனவும் கூறினார் ஷமி.
மீண்டு வந்த ஷமி
இந்த மோசமான காலத்தில் இருந்து மீண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஷமி, தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் ஒருநாள் அணியிலும் இடம் பெற்றார். 2019 உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் 14 விக்கெட்கள் எடுத்த அவர், அதே ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் 33 விக்கெட்கள் சாய்த்தார்.