அசத்தல் ஆட்டம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்ற அணிகளை மிரட்டி வந்தது. மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் வழக்கம் போல் அதிரடி காட்டினாலும் இந்தாண்டு பவுலிங் தான் ஆர்சிபியில் அட்டகாசமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இளம் வீரர்கள் ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் தான்.
ஹர்ஷல் வேகம்
கடந்தாண்டு ஐபிஎல்-ல் ஓரளவிற்கு பவுலிங்கில் நற்பெயர் சம்பாதித்த சிராஜுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தது. 13 விக்கெட்களை சாய்த்து அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனால் ஆர்சிபி அணியில் விராட் கோலியின் விருப்பமான பவுலராக விளங்கி வருகிறார்.
கோலி நம்பிக்கை
இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்வில் விராட் கோலி ஏற்படுத்திய தாக்கம் குறித்து சிராஜ் மனம் திறந்துள்ளார். எனக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் விராட் கோலி கூடவே இருப்பார். 2 வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் அவர் மட்டும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணியில் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
நினைவுகள்
இதே போல தனது ஆரம்பக்கட்ட வாழ்கை குறித்து பேசிய சிராஜ், மிகவும் பழமையான பஜாஜ் ப்ளாட்டினா பைக் எனக்கு இன்னனும் பிடிக்கும். அதில் செல்ஃப் ஸ்டார்ட், கிக்கர் எதுவுமே இருக்காது. வண்டியை தள்ளிதான் ஸ்டார்ட் செய்ய முடியும். நான் மைதானத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதற்கு அந்த பைக் தான் மிகவும் உதவியாக இருந்தது. அது எனக்கு மிக பிடிக்கும் எனக்கூறியுள்ளார்.