கொச்சி : இந்தியன் சூப்பர் லீக் அணியான கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை சமீபத்தில் விற்று விலகினார் சச்சின்.
சச்சின் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் தூதராகவும் இருந்தார். அவர் விலகிய நிலையில், மோகன்லால் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா நேற்று கொச்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர் அணியின் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தார்.
மோகன்லால் வெறும் தூதர் என்பதை தாண்டி, அணியின் பங்குதாரராக மாற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை அந்த அணியின் தலைமை செயல் நிர்வாகி வருண் திரிபுராநேனி உறுதி செய்துள்ளார்.
சச்சின் சமீபத்தில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியில் இருந்த தன் 20 சதவீத பங்குகளை மற்ற பங்குதாரர்களிடமே விற்று விட்டார். இந்தியன் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்துமே நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியும் கடும் நஷ்டத்தில் தான் உள்ளது.
நஷ்டம் அதிகரித்து கொண்டே செல்வதால் சச்சின் தன் பங்குகளை விற்றார் என கூறப்படுகிறது. தற்போது, மோகன்லால் பங்குதாரராக மாற உள்ளார். சச்சின் இருந்த காரணத்தால், மைதானத்துக்கு கூட்டம் கூடியது. தற்போது அவர் இல்லாத நிலையில், மோகன்லால் ரசிகர்களை ஈர்க்கும் பணியை மேற்கொள்வார் என கருதப்படுகிறது.