அம்பதி ராயுடுவுக்கு நடந்தது என்ன?
அம்பதி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் யோ-யோ தேர்வில் குறிப்பிட்ட அளவு செயல்படவில்லை எனக் கூறி ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தொடருக்கு முன் அணியில் தேர்வு செய்யப்பட்டும், விளையாடும் வாய்ப்பை இழந்தனர். குறிப்பாக அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் ரன்கள் குவித்து உச்சகட்ட பார்மில் இருந்தும், அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையானது.
யோ-யோ வைத்து நீக்குவது சரியல்ல
யோ-யோ தேர்வு பற்றி கைஃப் கூறுகையில், "உடற்தகுதி மிகவும் முக்கியம். அதனால் தான் இந்திய அணி இன்று பீல்டிங்கில் முன்னேறி இருக்கிறது. ஆனால், அதை சமநிலையோடு அணுக வேண்டும். ஒரு வீரர் நன்றாக ரன்கள் குவித்தோ அல்லது விக்கெட்கள் வீழ்த்தியோ இருக்கும் போது, அவரை வெறுமனே யோ-யோ தேர்வில் தோற்று விட்டார் என நீக்குவது சரியல்ல" என கூறினார். கைஃப் இந்திய அணியில் சிறந்த பீல்டராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க காலத்தில் பீப் டெஸ்ட்
"நான் இந்திய அணியில் இருந்த போது "பீப் டெஸ்ட்" என ஒரு முறை இருந்தது. அதை வைத்து வீரர்களின் உடற்தகுதியை தெரிந்து கொள்வார்கள். ஆனால், எந்த வீரரையும் அதை வைத்து நீக்கியதில்லை. வீரர்களுக்கு உடற்தகுதி சரியில்லை என அறிவுறுத்தப்படும். அடுத்த சில மாதங்களில் அந்த வீரர் அதில் முன்னேற வேண்டும்" என தன் காலத்தைய நடைமுறை பற்றி கூறினார் கைஃப்
அரசியல் இனிமேல் வேண்டாம்
கைஃப் முன்பு காங்கிரஸ் கட்சியில் சீட் பெற்று 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார் கைஃப். மேலும், தற்போது தனது பயிற்சி மையத்தில் இருக்கும் வீரர்களை இந்திய அணியில் ஆட வைப்பதே லட்சியம் என கூறினார் கைஃப்.