அடுத்தடுத்து தோல்வி
உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் படுதோல்வியடைந்த பாகிஸ்தான், அடுத்த போட்டியில் மே.இ.தீவுகள் அணியுடனும் 150 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.
ரசிகர்கள் ஆக்ரோஷம்
இந்தியாவுடன் அடைந்த தோல்வியை அடுத்து கராச்சியில் சில ரசிகர்கள் டிவிகளை தெருவில் போட்டு உடைத்தனர். அடுத்தடுத்த தோல்விகள் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூதாட்ட விடுதியில் பார்ட்டி
இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் கேப்டனுமான மொயின்கான் நியூசிலாந்திந் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள சூதாட்ட கேளிக்கை விடுதிக்கு (கேசினோ) சென்று உணவு சாப்பிட்டதாக தகவல் வெளியானது. அதுவும் மே.இ.தீவுகளிடம் பாகிஸ்தான் ஆடிய போட்டிக்கு முந்தைய நாள் இரவில் இந்த விடுதிக்கு மொயின்கான் சென்றிருந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
இந்த சம்பவத்தையடுத்து மொயீன்கானை பாகிஸ்தான் திரும்புமாறு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. நேற்றிரவு கராச்சிக்கு திரும்பிய மொயின்கான் ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றார். ஆனால் காரை சூழ்ந்து ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். அவரது வீட்டை முற்றுகையிட்டும் ரசிகர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மன்னிப்பு கேட்ட மொயின்
இதனிடையே மொயின் கான் தனது செயலுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘இரவில் சாப்பிடுவதற்காக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அந்த கிளப்புக்கு சென்றேன். ஆனால் இரவு விருந்துக்காக நான் தேர்வு செய்த இடம் உண்மையிலேயே பொருத்தமில்லாத ஒன்று என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக பாகிஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு
இருப்பினும் ரசிகர்கள் ஆத்திரம் குறையாததால், மொயின்கான் வீட்டை சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.