இந்தியா -வங்கதேசம் மோதல்
இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் மோதிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
தெறிக்க விட்ட கோலி
இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி, அபாரமாக விளையாடி தனது 27வது சதத்தை நிறைவு செய்தார். இந்நிலையில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களின் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
2வது நாள் முடிவில் 152 ரன்கள்
இரண்டாவது நாளிலேயே வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை நிறைவு செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் முஷபிகுர் ரஹிம், மக்முதுல்லா உள்ளிட்ட வீரர்கள் இந்திய பந்துவீச்சை ஓரளவிற்கு எதிர்த்து ஆடியதை அடுத்து, 3வது நாளில் விளையாட அந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
மாற்று வீரர்கள் ஆட்டம்
முதல் இன்னிங்சில் விளையாடிய வங்கதேச அணி வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹாசன் உள்ளிட்டவர்களின் ஹெல்மட்டை முகமது ஷமி வீசிய பந்து பதம் பார்த்தது. இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக மெஹிடி ஹாசன் மிராஸ் மற்றும் தைஜூல் இஸ்லாம் களமிறங்கி விளையாடினர்.
பார்வைத்திறன் குறித்து கேள்வி
இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய வங்கதேச அணி வீரர்கள் முகமது மிதுன் மற்றும் முஷ்பிகூர் ரஹீம் ஆகியோரின் ஹெல்மட்டையும் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் வீசிய பந்துகள் தாக்கின. இதையடுத்து எஸ்ஜி பிங்க் பந்தின் பார்வைத்திறன் குறித்து கேள்வி எழுந்தது.
புஜாரா விளக்கம்
முதல் இன்னிங்சை விளையாடிய செத்தேஷ்வர் புஜாரா மின்னொளியில் பேட்டிங் செய்தது மிகுந்த சவாலாக இருந்ததாகவும் சூரிய வெளிச்சத்தில் பேட்டி செய்தது எளிதாகவும் மின்னொளியில் பந்து ஸ்விங் ஆனதால் பேட்டிங் கடுமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போட்டியாளர்கள், நடுநிலையாளர்கள் கருத்து
போட்டியில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட எஸ்ஜி பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆனதாக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே கருத்தை போட்டியை பார்த்த நடுநிலையாளர்களும் பிரதிபலித்தனர்.
வங்கதேச வீரர் கருத்து
எஸ்ஜி பிங்க் பந்துகளை எதிர்கொள்ள வங்கதேச அணியின் தொழில்நுட்ப குறைபாடு காரணமல்ல என்று அந்த அணியின் வீரர் அல் அமின் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஆட்டக்காரர்களின் ஹெல்மட்டில் அடிபடுவது வழக்கமான ஒன்றுதான் என்று கூறியுள்ள அவர், பந்தின் பார்வைத்திறன் குறைவாக இருந்ததாக கூறப்படுவதை ஏற்கமுடியாது என்றும் தான் பேட்டிங் செய்தபோது எளிதாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.