சர்ச்சை
தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் வீரர்களான டூப்ளசிஸ், இம்ரான் தாஹீர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு பெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த டூப்ளசிஸுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னை எனக்கூறப்படுகிறது.
மோரிஸ் ஓய்வு
இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மோரிஸ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அதில் அவர், அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று கூறுபவன் கிடையாது. ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்காக நான் கிரிக்கெட் இனி விளையாட மாட்டேன் என்பது உறுதி. என்னுடைய நிலைபாடு என்ன என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். அந்தவகையில் இனி நான் விளையாட மாட்டேன் என அவர்களுக்கு புரிந்து இருக்கும்.
Recommended Video
கிறிஸ் மோரிஸ் விளக்கம்
என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவடைந்தது. இனி நான் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். பலரிடமும் எனது முடிவு குறித்து ஆலோசித்துவிட்டேன். அதன் பிறகு தென்னாப்பிரிக்க வாரியத்திடம் நான் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் டூப்ளசிஸ், இம்ரான் தாஹீர், என்னிடம் அவர்கள் நடந்துக்கொண்ட விதம் தவறானது. அதனை குறித்து நான் பேசக்கூட விரும்பவில்லை. என்னுடைய முடிவை நான் எடுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
அனுபவம்
கடந்த 2012ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான கிறிஸ் மோரிஸ் இதுவரை 43 ஒருநாள் போட்டிகள், 23 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது மோரிஸ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மவுசு
சர்வதேச போட்டிகளில் மவுசு குறைந்தாலும், ஐபிஎல் தொடரில் கிறிஸ் மோரிஸுக்கான மவுசு மிக அதிகம். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றவர் கிறிஸ் மோரிஸ் தான். ஐபிஎல் 2021 ஏலத்தின் போது கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.