3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நாளைய தினம் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். நாளைய போட்டியில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
பகலிரவு போட்டி
இந்நிலையில் தான் இதுவரை பார்த்த மைதனங்களில் சிறப்பான ஒரு மைதானமாக மோதேரா மைதானம் உள்ளதாக இங்கிலாந்து பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், நாளைக்கு மோதேராவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
ஆர்ச்சர் உற்சாகம்
மைதானம் அழகாக உள்ளது. இருக்கைகளும் அழகாக உள்ளது, அதிகமான ரசிகர்கள் போட்டியை பார்க்க முடியும் என்பது எங்கும் இல்லாத சிறப்பு. அங்கு நடைபெறவுள்ள போட்டியை காண தான் ஆவலுடன் இருப்பதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாவது போட்டியில் ஆர்ச்சர் விளையாடவில்லை. மாறாக அவருக்கு வலி காரணமாக ஊசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சற்று கடினமானதுதான்
மற்ற போட்டிகளை போலவே பிங்க் பால் போட்டியும் ஒரே மாதிரியானதுதான் என்றாலும் அதில் சிறப்பாக விளையாடுவது சற்று கடினம்தான் என்று தெரிவித்துள்ள ஆர்ச்சர், இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவது கடினமானது என்று குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு புதியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.