சிட்னி : தோனி மற்றும் நிலையான ஆட்டம் போன்ற காரணங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஆல்பீ மார்க்கெல் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் பங்கு அலாதியானது என்றும் தன்னுடைய அணியில் உள்ள வீரர்களின் திறமையை அறிந்து அதை வெளிக்கொணரும் திறமை அவருக்கு அதிகமாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க அணியின் ஆல் -ரவுண்டர் மார்க்கெல், சிஎஸ்கே அணிக்காக விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல்லின் 3வது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை புரிந்தவர்.
எல்லாம் முறையாக நடந்திருந்தால் ஐபிஎல்லின் 13வது சீசன் இன்னும் 4 நாட்களில் அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கியிருந்திருக்கும். முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியினர் விளையாடி இருந்திருப்பார்கள். ரசிகர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு குறையாத தித்திப்பை வழங்கியிருந்திருக்கும். ஆனால் கொரோனா கொடுத்த அதிபயங்கர அனுபவம், அதை நடக்க விடாமல் செய்து விட்டது.
ஆனாலும் விளையாட்டைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் உணர்ந்தே உள்ளனர். அதனால் தற்போதைய நிலையில் ஐபிஎல் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறுவதை கூட ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் உலக மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலை அனைவருக்கும் வந்துள்ளது.
கொரோனா தொற்று முற்றிலும் நீங்கினால், சந்தோஷமான மனநிலையுடன் போட்டிகளை பார்க்கலாம் என்ற கணக்கு ரசிகர்களிடம் உள்ளது. அதுவும் சரிதானே, கொரோனா தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில் விளையாட்டை சந்தோஷமான மனநிலையில் பார்ப்பது சிரமமான விஷயம். ஐபிஎல் போட்டிகள் தோனி உள்ளிட்டவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும்நிலையில், அதனை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தே உள்ளனர்.
இந்நிலையில், தோனி மற்றும் நிலையான ஆட்டம் போன்றவை உள்ள வரையில் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், அதன் வெற்றியை தடுத்துவிட முடியாது என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஆல்பீ மார்க்கெல் தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கேவின் கேப்டனாக உள்ள எம்எஸ் தோனி, தன்னுடைய அணியில் உள்ள வீரர்களின் திறனை சரியாக மதிப்பிட்டு அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வித்தை தெரிந்தவர் என்றும் மார்க்கெல் குறிப்பிட்டுள்ளார். ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் வீரர், அந்த அணியின் வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலையான ஆட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக சிஎஸ்கே அணியினர் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மார்க்கெல், கடந்த 10 சீசன்களில் 8 தொடர்களின் இறுதிப்போட்டியில் விளையாடியதன்மூலம் சிஎஸ்கே அணியினர் இதை நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.