3 சிறந்த ஜாம்பவான்கள்
இங்கிலாந்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் உலககோப்பை தொடரில் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் டாப் டென் அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. மேலும், இந்த தொடரில் சில அணிகளுக்காக வெற்றியை தரக்கூடியவர் என்று வரையறுக்கப்பட்டுள்ள 3 சிறந்த ஜாம்பவான்களை பற்றி பார்க்கலாம்.
தல தோனி
மகேந்திர சிங் தோனி... கிரிக்கெட் உலகில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத, மறந்துவிட முடியாத பெயர். 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் சிக்சர் அடித்து கோப்பையை வென்று தந்தவர். ஐசிசியின் அங்கீகரிக்கப்பட்ட 3 வடிவிலான கிரிக்கெட் கோப்பைகளை வென்ற தந்த ஒரே கேப்டன்.
அணியில் நிரந்தர இடம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஆட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர். 2004ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். பின்னர், 2005ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி, 148 ரன்கள் குவித்து அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார்.
நிச்சயம் உண்டு
2007ம் ஆண்டில் டி 20 உலக கோப்பை, 2011ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என மூன்று வடிவிலான கோப்பைகளை வென்றவர். எனவே, இந்த உலக கோப்பை தொடரில் தோனியின் பங்கு சர்வ நிச்சயம் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.
தனி ஒருவன் கெயில்
யுனிவர்சல் பாஸ் என்ற அனைவராலும் வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல், பற்றி அறிமுகம் தேவையில்லை. தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். 1999ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
இரட்டை சதம் சாதனை
2006ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், தொடர் நாயகன் விருதை வென்றவர். அந்த தொடரில் 474 ரன்களையும் 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 2015ம் ஆண்டு உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்து உலக கோப்பை தொடரில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
துணை கேப்டனாக நியமனம்
சமீபத்தில், நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அதிரடி ரன் குவிப்பால், ரசிகர்களுக்கு தமது திறமையை மீண்டும் உணர்த்தினார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனிலும் கலக்கியர் கெய்ல். அதன் எதிரொலியாக மேற்கிந்திய தீவுகள் உலக கோப்பை அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர்.
கடைசி பந்தில் வெற்றி
அடுத்தது... மூத்த வீரரான லசித் மலிங்கா. அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு கடைசி பந்தில் வெற்றியை தந்தவர். இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா, 2004ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
மலிங்கா மாயாஜாலம்
2007ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். எனவே, 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மலிங்காவின் மாயாஜாலத்தில் இலங்கை அணி சாகசம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.