மிர்புர் : வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரன் ஓடும் போது குறுக்கே வந்த வங்கதேச பவுலரை தோனி இடித்துத் தள்ளினார்.
இந்திய அணி 123/4 என்று தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த நேரத்தில் ஆட்டத்தின் 25-வது ஓவரில் அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோனிக்கு ஒரு பந்தை யார்க்கராக வீசினார்.
தோனி அதனை மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒரு விரைவு சிங்கிளுக்காக ரன்னர் முனை நோக்கி ஓடி வந்தார்.
அப்போது பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடது புறமாக வேண்டுமென்றே நகர்ந்து வந்து தோனியின் ரன்னுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமாறு வந்தார்.
தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார். இதனால் பவுலருக்கு லேசாக பொறி கலங்கிவிட்டது. உடனேயே தோனி நடுவரிடம் பவுலர் வேண்டுமென்றே குறுக்காக வந்தார் என்று சைகை காட்டினார்.
ஆனால், பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் தடுமாறி அந்த ஓவர் பந்து வீசாமல் பெவிலியன் சென்றார்.
ஏற்கெனவே மிட்செல் ஜான்சனை ஒருமுறை தோனி இதுபோன்று இடித்து தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது நேரம் தோனி செய்கை பற்றி அதிர்ச்சி நிலவினாலும் தமிம் இக்பால் நடந்ததைப் புரிந்து கொண்டு புன்னகைக்க, அவர் தோள் மீது கைபோட்டபடி தோனி அளவளாவியதும் நிகழ்ந்தது.
ஆனால், ட்விஸ்ட் என்னவென்றால் சம்பவத்தால் கவனம் இழந்த தோனி அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன் பந்தை டிரைவ் ஆட முயன்றார். அப்போது பந்து வெளியே சென்று பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அந்த பந்தை முஷ்பிகுர் ரஹிம் கேட்ட் பிடித்தார். இதனால் தோனி 5 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.