ஓய்வு குறித்த யூகங்கள்
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தன்னுடைய கேரியரில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தன்னுடைய அணி வீரர்களை அரவணைத்து செல்பவர் என்ற புகழ்ச்சிக்கு உரியவர் தோனி. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கியவர். 'தல' என்றும் 'கேப்டன் கூல்' என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.
போட்டிகளில் பங்கேற்காத தோனி
கடந்த உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் மோதிய இந்திய அணி தோற்று வெளியேறியது. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை தோனி தவிர்த்து வருகிறார். இதனிடையே, அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்றும், ஓய்வை அறிவிப்பார் என்றும் பல யூகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நேற்றைய தினமும் #DhoniRetires என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் ட்ரெண்டாகியது.
தோனிக்கு உரிமை உண்டு
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளரும், இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கிய அணியை வழிநடத்தியவருமான கேரி கிர்ஸ்டன், தற்போது தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்து தீர்மானிக்க தோனிக்கு உரிமை உண்டு எனவும், அதை அவர்மீது திணிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோலி, தோனி தலைமை சமமானது
தோனி சிறப்பான வீரர் என்றும், புத்திசாலி, அமைதியானவர், வலிமை, வேகம் போன்ற திறமைகள் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி நவீன கிரிக்கெட்டின் சிறப்பான விளையாட்டு வீரராக இருக்க செய்கிறது என்றும் கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தோனி மற்றும் கோலியின் தலைமை முற்றிலும் வித்தியாசமானது என்றும் ஆனால் சமமானது என்றும் தெரிவித்துள்ளார்.