இந்தியாவின் அடையாளம்
கிரிக்கெட்டில் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ள ஐபிஎல் 2020 தொடர், கடந்த 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இம்மாதம் 15ம் தேதி வரையிலும், அதன்பிறகு தற்போது காலவரையின்றியும் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சிறப்பான கேப்டன்
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்சின் நடுவர்கள் ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேகர், தாரன் கங்கா, ஸ்காட் ஸ்டைரிஸ், மைக் ஹெசன், டீன் ஜோன்ஸ், ரசல் அர்னால்ட், சைமன் தவுல், மற்றும் கிரீம் ஸ்மித் போன்றவர்கள் இணைந்து, இதுவரையிலான ஐபிஎல் சீசன்களின் சிறந்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
60.11 புள்ளிகளுடன் பெருமை
இந்த தேர்வில் ஐபிஎல் சீசனின் 'கோட்' கேப்டன் விருதை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 60.11 புள்ளிகளுடன் தட்டி சென்றுள்ளார். 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த பெருமையை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி பெற்றுள்ளார்.
சிறப்பான அணி சிஎஸ்கே
கடந்த 12 ஐபிஎல் சீசன்களில் 3 முறை எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே, இறுதிப்போட்டி வரை அதிக முறை வந்து கோப்பையை பறிகொடுத்துள்ளது. குறைந்தபட்சம் அரையிறுதி மற்றும் பிளே ஆப் சுற்றுகளிலாவது சிஎஸ்கே தேர்வு பெற்றுவிடும். தோனியும் ஐபிஎல் தொடரில் இதுவரை 4,000 ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோல கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
பெருமையை நீடிக்க செய்பவர்
ரோகித்தை போலவே, கவுதம் கம்பீர், ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் போன்ற மற்ற கேப்டன்களையும் பின்னுக்கு தள்ளி இந்த 'கோட்' விருதை அள்ளி வந்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இவர் கடந்த 2008ல் சிஎஸ்கேவால் மிக அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் அது அப்போது மிகப்பெரிய ரெக்கார்டாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.